Tuesday, December 1, 2009

கருப்பு பூனைகள் கண்ணியம் அற்ற தலைவர்கள்

நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் என்றால் அது தினசரி செய்தி; ஆளுங்கட்சி எதைச் செய்தாலும், அதில் தப்பு கண்டுபிடித்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டியிருக்கிறதே! மிக அரிதாக சில தருணங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசங்களை மறந்து, எல்லா கட்சி எம்.பி.க்களும் எழுந்து ஒரே குரலில் கருத்து தெரிவிப்பார்கள். காந்தி கண்ட ஜனநாயகக் கனவு முழுமையடைந்துவிட்டதோ என சிலிர்க்கவைக்கும் அப்படிப்பட்ட தருணம், சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அரிசி, பருப்பு வகைகளின் விலை உயர்வு பற்றியோ, ஏமாற்றும் பருவமழையால வரப்போகும் உணவுப்பஞ்சம் பற்றியோ நமது மக்கள் பிரதிநிதிகள் பேசிவிட்டதாக நினைத்து சிலிர்ப்படைந்துவிடாதீர்கள்... வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வளையத்தைக் குறைக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கவே ஒருமித்த குரலில் அவர்கள் பேசினார்கள். மாயாவதியின் கட்சியினரும் முலாயம்சிங் யாதவ் கட்சியினரும் ஒரே குரலில் பேசியது உத்திரப் பிரதேசத்தை திக்பிரமையில் ஆழ்த்திவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக தன் சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்ததால், வேறு வழியின்றி சிதம்பரம் பின்வாங்க வேண்டியதாயிற்று!இத்தனைக்கு சிதம்பரம் ஒரேயடியாக பாதுகாப்பை குறைக்கும் அதிரடி முடிவை எடுக்கவில்லை. நியாயமாகத் தேவை இருக்கும் தலைவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு தருவது; அதிலும் எந்த அளவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதோ, அதைப் பொறுத்து தருவது... என கொள்கை முடிவு எடுத்தார். கடந்த 2006ம் ஆண்டு ஜூலையில் மும்பை புறநகர் ரயில்களில் குண்டுகளை வெடிக்கச்செய்து ஏராளமான அப்பாவிகளை தீவிரவாதிகள் கொன்று குவித்தனர். அப்போது மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்த ஆர்.ஆர்.பாட்டீல், சம்பவ இடங்களைப் பார்வையிட்டபிறகு உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தைகள் இந்தியா முழுக்க பிரபலம்... ‘மும்பை போலீசார் வி.ஐ.பி.களை பாதுகாப்பதை விட்டுவிட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும்!’ ஆனால் பாட்டீல் எடுத்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சியினரே முறியடித்துவிட்டார்கள். கடந்த ஆண்டு கடல்வழியாக வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை முற்றுகையிட்டபோது இதன் விளைவு தெரிந்தது. எத்தனையோ அனுபவங்கள் இருந்தும், எந்தவகையிலும் ஒரு தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் மும்பை போலீஸ் திணறி, பல திறமையான அதிகாரிகளை இழந்தது. கமாண்டோ படை வந்தபிறகும் பல மணி நேரங்கள் தீவிரவாதிகள் முற்றுகை நீடித்தது. இப்படி தீவிரவாத தாக்குதல்கள், விமானக் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க உருவாக்கப்பட்ட கமாண்டோ படை எனவும் கறுப்புப் பூனைப்படை எனவும் அழைக்கப்படும் என்.எஸ்.ஜி. படையினர்தான் நமது தலைவர்களை பாதுகாக்கும் பணியில் பெருமளவு ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது இன்னொரு அவலம்!இந்தியா முழுக்க இப்படி பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை சுமார் 13 ஆயிரத்துக்கும் மேல்! மத்திய உள்துறை அமைச்சகம் தரும் கணக்கு இது. பிரதமர்கள், ஜனாதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்த எல்லா பிரிவுகளிலும் இருக்கும் சில முன்னாள்கள் என நீள்கிறது இந்தப் பட்டியல். இவர்களைப் பாதுகாக்கும் பணியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் பாதுகாப்பு பணிகளுக்காக செலவிடப்படுவதாக ஒரு கணக்கு சொல்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இப்படி ஒரு பாதுகாப்பை அனுபவிக்க, இவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்கள்? சொல்லப்போனால், இந்த எல்லா வி.ஐ.பி.களுக்கும் மிரட்டல் விடுக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளில் ஆரம்பித்து, உல்பா தீவிரவாதிகள், உள்ளூர் தாதாக்கள் வரையுள்ள பலரையும் ஒடுக்குவதற்குக்கூட இவ்வளவு பெரிய படை பலத்தை நம் தேசம் பயன்படுத்தியிருக்காது.ப.சிதம்பரமே கூட, ஒரேயடியாக இந்தப் பாதுகாப்பை வாபஸ் பெற்று, எல்லா தலைவர்களையும் நிர்க்கதியாக ரோட்டில் விட நினைக்கவில்லை. நியாயமாக யார் யாருக்கு என்ன பாதுகாப்பு தேவையோ, அதை மட்டுமே கொடுக்க விரும்பினார். ஆனால் பல தலைவர்கள் இதையும் ஒரு அரசியல் அந்தஸ்தாக நினைப்பதுதான் பிரச்னை!பிரதமராக இருந்தபோது இந்திராவையும், பதவியில் இல்லாதபோது ராஜீவையும் தீவிரவாதத் தாக்குதலில் இழந்தபிறகே, தலைவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவில் விழிப்புணர்வு வந்தது. பிரதமரின் பாதுகாப்புக்காக எஸ்.பி.ஜி. எனப்படும் பிரத்யேக பாதுகாப்புப் படை உருவானது. பதவியிலிருக்கும் பிரதமருக்கும், அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும் இந்தப்படை... முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கும், பதவியிலிருந்து விலகியபிறகு 10 ஆண்டுகள் பாதுகாப்பு வழங்கும்; அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலைப் பொறுத்து இந்தப் பாதுகாப்பு நீடிக்கப்படும். இஸட் பிளஸ் எனப்படும் அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் வி.ஐ.பி.களை பாதுகாப்பதும் இவர்களது கூடுதல் பணியானது. கறுப்புப் பூனைப்படை எனப்படும் என்.எஸ்.ஜி. படையினர் இதற்கு அடுத்து வருவார்கள். தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக உருவான இந்த அமைப்பும் வி.ஐ.பி.கள் பாதுகாப்புப்படையாக ஆகிவிட்டது. இதுதவிர இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ், டெல்லி போலீஸ் மற்றும் பல்வேறு மாநிலங்களின் போலீசார் இந்த பாதுகாப்பு பணிகளை சிரமேற்கொண்டு செய்கின்றனர். இப்படி பல்வேறு படைகளில் இருப்பவர்களை இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தவறு என்பதை உணர்ந்த மத்திய உள்துறை, தலைவர்கள் பாதுகாப்புக்காக தனி படையை உருவாக்க கடந்த 2006ம் ஆண்டு முயற்சி மேற்கொண்டது. முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்றும், மற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்க செலவிடப்படும் தொகையை அவர்களிடமிருந்து வசூலிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் எல்லா அரசியல்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இணைந்து, இந்தத் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டன. இஸட் பிளஸ் எனப்படும் பாதுகாப்பு வளையம்தான், பிரதமருக்கு வழங்குவதற்கு அடுத்தபடியாக உயர்மட்ட பாதுகாப்பு. எஸ்.பி.ஜி. மற்றும் என்.எஸ்.ஜி. படைகளைச் சேர்ந்த 36 பாதுகாவலர்கள் எப்போதும் பாதுகாப்பு வளையம் அமைத்து சூழ்ந்திருப்பார்கள். தலைவர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, பல்வேறு மாநில முதல்வர்களான நரேந்திர மோடி, புத்ததேவ் பட்டாச்சார்யா, ஒமர் அப்துல்லா, அசோக் சவான், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜி, சரத் பவார், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, கட்சித் தலைவர்களான பால் தாக்கரே, முலாயம்சிங் யாதவ் என 31 பிரமுகர்கள் இந்த அதி பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள். இஸட் பிளஸ் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக இஸட் பிரிவு வருகிறது; இதில் குறைந்தபட்சம் 22 செக்யூரிட்டிகள் வருவார்கள். அடுத்ததாக ஒய் பிரிவு; இதில் 11 பாதுகாவலர்கள் குறைந்தபட்சம் இருப்பார்கள். அடுத்தது எக்ஸ் பிரிவு; இதில் குறைந்தபட்சம் இரண்டு பாதுகாவலர்கள் உண்டு. இந்த வகைகள் தவிர மாநில அரசுகள் அவர்கள் இஷ்டத்துக்கு யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் பாதுகாப்புக்கு வரம்புகள் கிடையாது.டெல்லி போலீஸ் படையில் மொத்தம் இருப்பது 60 ஆயிரம் பேர்; இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் அதாவது 15 ஆயிரம் பேர் நிரந்தரமாக வி.ஐ.பி.களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கின்றனர். விளைவு... தேசத்தின் தலைநகராக இருப்பது போலவே குற்றங்களின் தலைநகராகவும் இருக்கிறது டெல்லி. குழந்தைகள் கடத்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்ற கொடூரமான குற்றங்கள் அதிகம் நடப்பது அங்குதான்! மும்பையின் 42 ஆயிரம் போலீஸாரில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் வி.ஐ.பி.களை பாதுகாக்கும் பணிகளையே செய்கின்றனர். அரசியல் தலைவர்கள் அதிகம் இருக்கும் பீகார் மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக இருக்கிறது. யார் யாருக்கு இதெல்லாம் அவசியம்..? எந்த அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது? ரயில்வே அமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கிய லாலு, அதோடு சேர்த்து போனஸாக வாங்கியது இஸட் பிளஸ் பாதுகாப்பு. இதைப் பார்த்து பாஸ்வானும் அடம்பிடித்து வாங்கினார். சொந்த மாநிலமான பீகாருக்குப் போகும்போது, மாநில முதல்வர் நிதீஷ்குமாரைவிட பந்தாவாக வலம்வர வேண்டும் என்பது மட்டுமே இதற்குக் காரணமே தவிர, இவர்களுக்கு யாராலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தது கிடையாது. தன் மனைவி ரப்ரி தேவி, மச்சான்கள் என எல்லோருக்கும் பாதுகாப்பு வளையத்தை ஒட்டுமொத்த பேக்கேஜாக வாங்கினார் லாலு. மன்மோகனின் கடந்த பதவிக்காலத்தில் திடீரென இடதுசாரிகள் முறைத்துக்கொண்டு ஆதரவை வாபஸ் வாங்கியபோது, ஆபத்பாந்தவனாக ஆதரவுக்கரம் நீட்டினார் முலாயம். இதற்குப் பிரதிபலனாக அவருக்கும் அமர்சிங்குக்கும் இஸட் பிளஸ் பாதுகாப்பை அளித்தது மத்திய அரசு. யார் யாருக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் என மத்திய உள்துறை அமைச்சகம் அடிக்கடி நிலைமையை ஆராய்ந்து பட்டியல் தயாரிக்கும்; அந்தப் பட்டியலைப் பார்த்து முடிவெடுக்கவேண்டிய அதிகாரம் உள்துறை அமைச்சரின் கையில் இருக்கிறது. இதனாலேயே தலைவர்கள் பாதுகாப்பு என்பது அரசியல் பாரபட்சங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவானது! எப்போதோ அரசியல் லைம்லைட்டிலிருந்து மறைந்துபோன நட்வர்சிங், சிவராஜ் பாட்டீல், சுரேஷ் பச்சௌரி என பல பிரபலங்கள் இன்னமும் பாதுகாப்பு வளையத்தோடு மிடுக்கு காட்டுகிறார்கள். தீவிரவாதிகள் என்றில்லை... காதருகே பறக்கும் கொசு கூட இவர்களுக்கு அச்சுறுத்தல் தருவதில்லை என்பதுதான் நிஜம்!ஆனால் பாதுகாப்பைக் குறைக்க அரசு முயற்சி மேற்கொண்டபோது, ‘எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு!’ என முலாயமும் லாலுவும் ஆவேசமாக முழங்கினார்கள். மாயாவதியின் கட்சியினரும் இதையே செய்தார்கள். எதற்கு வம்பு என்று அரசு பின்வாங்குகிறது. ஜெயலலிதா வசிக்கும் போயஸ்கார்டனின் யாராவது மனநிலை தவறியவர் நடமாடினால்கூட, அச்சுறுத்தல் என்று கூப்பாடு கேட்கும். இரண்டு டி.எஸ்.பி.கள் கொண்ட தனது பாதுகாப்பு பணிக்கு எஸ்.பி. அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்துவருகிறார் ஜெயலலிதா.இந்தப் பாதுகாப்பு அதிகாரிகளை பலரும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது இன்னொரு கூத்து. கடைக்குப் போய் காய்கறி வாங்கி வரவும், குழந்தைகளை ஸ்கூலில் விட்டு கூட்டி வரவும், தலைவர்களின் வாரிசுகள் டிஸ்கொதே கிளப்களுக்குப் போனால் வாசலில் காத்திருந்து தாங்கிப்பிடித்து கூட்டி வரவும் அரசு வாகனங்களில் இவர்கள் பரபரப்பாக பயணிக்கிறார்கள். சிலர் துணி துவைப்பது, காய்கறிகளை அரிந்துகொடுத்து சமையலில் ஒத்தாசையாக இருப்பது போன்ற ‘அரிய’ பணிகளையும் செய்கிறார்கள். இன்னும் சிலரின் வேலைகள் பயங்கரமானவை... பீகாரைச் சேர்ந்த முன்னாள் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. விஜயகிருஷ்ணாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். விஜயகிருஷ்ணாவின் மகன் செய்த ஒரு அரசியல் கொலைக்கு இந்த பாதுகாப்பு அதிகாரியும் உடந்தை. இதே லாலு கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர், மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைவர்களோடு எப்போதும் இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகும் இந்த பாதுகாப்பு அதிகாரிகள், தங்களுக்கு யார் உயர் அதிகாரி என்பதை எல்லாம் மறந்து, இந்தத் தலைவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிகிற ஏவலாளாக மாறிவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு தலைவரும் சுயேச்சையாக போலீஸ் ஸ்டேஷன்களையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும்கூட தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனாலும் அங்கு அதிபர், துணை அதிபர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற அரசியல் சாசன தலைமைப் பதவிகளை வகிப்பவர்கள்தவிர மற்றவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. வேறு யாராவது பாதுகாப்பு பெற விரும்பினால், அதற்கான செலவை அரசுக்குத் தந்துவிட வேண்டும். இந்த முன்மாதிரியை வைத்து மகாராஷ்டிரா அரசும் சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அங்கு பொதுமக்களில் யாராவது தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால், உரிய ஆதாரங்களுடன் புகார் தந்து, போலீஸ் பாதுகாப்பைப் பெறலாம். ஒரு கான்ஸ்டபிளுக்கு ஒரு நாளைக்கு 350 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இந்தக் கணக்கில் பார்த்தால், நம் தலைவர்கள் அரசுக்கு எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும்? சொல்லப்போனால், பாதுகாப்பு கெடுபிடிகளோடு வளையவரும் இவர்களால்தான் சாதாரண மக்கள் சாலைகளிலும் இதர இடங்களிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள்.நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் உள்துறை அமைச்சர் என்கிறமுறையில் ப.சிதம்பரம் இயல்பாகவே இஸட் பிளஸ் பாதுகாப்பைக் கேட்டு வாங்கலாம். ஆனால், ‘எனக்கு அந்த அளவுக்கு அச்சுறுத்தல் இல்லை; ஒய் பிரிவு பாதுகாப்பே போதுமானது’ என்று சொல்லிவிட்டார் அவர்.சிதம்பரத்தைப் போலவே சுயபரிசோதனை செய்துகொள்ள நம் தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா?
tha

Sunday, November 29, 2009

பிரபாகரனை மகனாகக் கருதி உதவிய தமிழக முன்னாள முதலமைச்சர் எம்.ஜி.ஆர்: பழ. நெடுமாறன்

பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன் தலைமையில் தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது. புலிகளின் போராட்டம் வெல்ல தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை எந்த நெருக்குதல் பற்றியும் கவலைப்படாமல் உலகறியத் தந்தவர் எம்ஜிஆர். உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். இத்தனைக்கும் அந்த சமயத்தில் இந்திய அமைதி காப்புப் படை வட இலங்கையில் நிலை கொண்டிருந்தது. தனது கடைசி மூச்சு நிற்பதற்கு ஒருநாள் முன்பு கூட விடுதலைப் புலிகளுக்கு பல கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்தைத் தரத் தயாராக இருந்தாராம் எம்ஜிஆர். மரணத்தின் விளிம்பில் நின்ற நேரத்திலும் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளுடன் வைத்திருந்த இடைவிடாத தொடர்பு, அளித்து வந்த ஆதரவு, எம்ஜிஆர் மறைவுக்கு புலிகள் செலுத்திய அஞ்சலி போன்றவை குறித்து, இன்றைய தினமணி இதழில் எழுத்தாளர் பாவை சந்திரன் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்: "தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து 31-10-1987 அன்று சென்னை திரும்பியதும், அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கியதுபோக, 4-11-1987 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். அதன்படி கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து தமிழீழத்தில் நடப்பது குறித்து விளக்கினார்கள் (விடுதலை 5-11-1987). 9-11-1987 அன்று தமிழக சட்டமன்றம் கூட இருந்த நேரத்தில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய அமைதிப்படை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பழ.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் அறிக்கை வெளியிட்டார்கள். கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதே கோரிக்கையை பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் அரசை வலியுறுத்தினார்கள். இப்படியொரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிடக்கூடும் என்ற ஐயத்திலும் அப்படியொரு தீர்மானம் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்துடனும் மத்திய அரசு , வெளியுறவு இணையமைச்சர் நட்வர் சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவரின் இந்த வருகை, சமீபத்தில் நடந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா சந்திப்பையொட்டிய தகவல்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கவே என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் பழ.நெடுமாறன் தனது நூலில், "சட்டமன்றத்தில் இந்திய அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றிட வேண்டாம் என முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டிக் கொள்வதற்காகவே நட்வர் சிங் வந்தார். பிரதமரின் விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் கொதிப்புணர்வை அவரிடம் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் தீர்மானம் எதையும் எம்.ஜி.ஆர். நிறைவேற்றாவிட்டாலும் தமிழ் மக்களின் மனநிலையைத் டெல்லி உணரும்படி செய்தார். பிரபாகரனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். மேற்கொண்டுள்ள நிலையில் இருந்து அவரை மாற்ற நட்வர் சிங் மூலம் ராஜீவ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பழ.நெடுமாறன் குறிப்பிடுவதாவது: "இதன் பின் அதிக காலம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கவில்லை. பிரபாகரனின் பிரதிநிதிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்து வந்தார். அவர் காலமாவதற்கு முதல்நாள் கூட ஒரு பெருந்தொகையைப் புலிகளுக்கு அளிக்க விரும்பி அவர்களுக்குச் சொல்லியனுப்பினார். வழக்கமாகப் பிரபாகரன் சார்பில் அவரைச் சந்திப்பவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் வேறொருவர் சென்றார். குறிப்பிட்டவரையே அனுப்பும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். வெளியூரில் இருந்த அந்த குறிப்பிட்ட தோழர் சென்னைக்கு விரைந்து வந்து எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்குள் காலதேவன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்' என்றும் குறிப்பிட்டுள்ளார். மார்பில் மூட்டிய தீ-பிரபாகரன் : உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது. பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்: "ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்..." (விடுதலை 25/26-12-1987/ எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்). எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த உதவிகள் குறித்து சிங்கள எழுத்தாளர் ரோகண குணரத்னவும் தான் எழுதிய "இந்தியன் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' (பக்கம்-182-இல்) என்னும் நூலில், "தமிழ்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த 'ரா' அதிகாரி சந்திரசேகரன், ராஜீவ் காந்தி சார்பில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் சொல்லியனுப்பியவற்றை அவர் வெளியிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர்., 'விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் வீழ்ந்துவிட விட்டுவிடாதீர்கள். விடுதலைப் புலிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும்' என்று கதறினாரென குறிப்பிடுள்ளார். "பிள்ளையில்லாத எம்.ஜி.ஆர். பிரபாகரனைத் தன்னுடைய மகனாகவே கருதி வாஞ்சை செலுத்தினார் எனக் கூறுவதில் தவறில்லை" என பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார்.

பிரபாகரன் செய்த தவறுகள்

ராஜீவ் காந்தியை கொலைசெய்ய முன்னரே இந்திய எதிரணியின் வலையில் புலிகள் சிக்கிக்கொண்டார்கள்.
அசாம் ஆயுதாரிகளுக்கு புலிகள் 1990 ஆம் ஆண்டிலேயே ஆயுதமும் பயிற்சியும் வழங்கியுள்ளனர்.
அசாம் ஆயுதாரிகளுக்கு புலிகள் பயிற்சி வழங்கியதாக அந்த அமைப்பின் முன்னாள் பேச்சாளரும் தற்போதைய உடகவியாளருமான சுனில் நாத் தெரிவிப்பு.
புலிகளின் தலமை பணத்திற்காகவும் ஆயுதங்களுக்காகவும் எந்த சக்தியின் வலையிலும் விழுவதற்கு தயாராக இருந்தார்கள். தென்கிழக்காசியாவில் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் இவர்களை பாவித்துக் கொண்டார்கள்.பாலசிங்கம் இறந்ததின் பிற்பாடு நோர்வே நாடு உட்பட பல தரப்புக்களுடனான உறவுகளை புலிகளினால் தொடர்ந்து பேண முடியாது போனது. இலங்கைக்கு வெளியே முதலில் புலிகளின் தலைவரை பாவித்தவர் ஒரு நடிகர் ஆவார். தமிழகத்தில் புரட்சி திலகமென அழைக்கப்பட்டு பின்னர் முதல்வரானான எம்.ஜி. ஆர் அவர்கள் சாதூர்யமாக புலிகளை பாவித்து இருந்தார்.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரத்தினை அடுத்து ஆயிரக்கணக்காண தமிழ் இளைஞர்கள் ஆயுத அமைப்புக்களில் தம்மை இணைத்துக் கொள்வதற்காக தமிழகத்திற்கு சென்று இருந்தார்கள்.அவ்வாறு சென்ற இளைஞர்கள் தம்மை பல இயக்கங்களில் இணைந்து கொண்ட போதும், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE),தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழ் ஈழ விடுதலை புலிகள்(LTTE) ஆகிய மூன்று அமைப்புகளிலேயே அதிக இளைஞர்கள் இணைந்திருந்தார்கள். எம்.ஜி. ஆர் அவர்கள் முதல்வராக இருந்தவேளை எதிர்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி அவர்கள் ரெலோ இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததோடு இலங்கை தமிழர்களின் நலன்களில் தமிழகத்தில் தனது கட்சியே அதிக அக்கறை உடைய கட்சி என்பதாக காண்பித்து வந்தார்.
அண்மையில் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், விடுதலை படைமுகத்தில் நின்ற ஒரு சில தலைவர்களுக்கு தானே வலுவில் சென்று ஆதரவு வழங்கி வந்தாக தெரிவித்து இருந்தமை குறிப்பிடதக்கது. மேலும் கருணாநிதியின் ஆதரவுடன் ரெலோ இயக்கம் தமிழகத்தினை சேர்ந்த ஒரு கட்சி போலவே நடந்து கொண்டது. இவ் வகையாக ரெலோ இயக்கம் நடந்து கொண்டதினை அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
1980 ஆம் ஆண்டளவில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவினை அடுத்து தமிழகத்திற்கு சென்று இருந்த பிரபாகரன் மற்றும் உமா மகேஸ்வரன் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இரவு 9 மணி 45 நிமிடம் அளவில் மாம்பளம் என்னும் இடத்தில் உள்ள பாண்டி பஜாரில் நேர் எதிரே சந்திக்கொண்டார்கள். ராகவன் என்பவருடன் வந்த பிரபாகரன் உமா மகேஸ்வரனை நோக்கி கைத் துப்பாக்கியினால் சுட்டு விட்டு ஓட ஆரம்பித்து இருந்தார்.
உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தின் இராணுவ பொறுப்பாளர் ஜோதீஸ்வரன் உடன் சென்ற வேளையிலேயே பிரபாகரன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு இருந்தார். பின்னர் கும்மிடிபூண்டி ரெயில் நிலையத்தில் வைத்து உமா மகேஸ்வரனை பொலிசார் கைது செய்ய முற்படுகையில் அவர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவாறு தப்பிக்க முயன்று இருந்தார். பிரபா மற்றும் உமா இருவரும் தமிழக பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள்.
கருணாநிதியின் ஆதரவில் தமிழகத்தில் இயங்கி வந்த ரெலோ இயக்கத்தின் தலைவரை இல்லாது செய்வதற்கு எம்.ஜி. ஆர் முயற்சி செய்து வந்தார். முதலில் இவர் உமா மகேஸ்வரனை அழைத்து “உனக்கு பிரபாகரன் ஒரு பிரட்சனை இல்லை, நான் அவருடன் பேசுகின்றேன். இவன் சிறி சபாரட்ணம்தான் உனக்கு பிரட்சனையாக இருப்பான், அவனை நீ கவனித்துக் கொள்” என்று கூறியிருந்தார். இதனை கேட்டு வந்த உமா மகேஸ்வரன், இவர்கள் தங்களுடைய பிரட்சனைக்கு எங்களை மோத வைக்க பார்க்கின்றார்கள் என்று தனது மூத்த உறுப்பினர்களுக்கு கூறியிருந்தார்.
உமா மகேஸ்வரன் தனது வலைக்குள் விழ மாட்டார் என்பதினை எம்.ஜி.ஆர் அறிந்தது கொண்டதும், பின்னர் பிரபாரகரனை அழைத்து உமா உனக்கு ஒன்றும் பிரட்சனையாக இருக்கமாட்டான், ஆனால் சிறி சபாரட்னத்தினால் உனக்கு ஆபத்து வரும் கவனித்துகொள் என கூறியிருந்தார். ஏம்.ஜீ.ஆர் கொடுக்க இருந்த பணத்திற்காக பிரபாகரன் சகோதர இயக்கத்தின் தலைவனையும் அந்த இயக்கத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களையும் கொலை செய்து இருந்தார். பணத்திற்காக எவரையும் பிரபாகரன் கொலை செய்வார் என்பதினை இந்த நிகழ்வு முதலில் நீரூபித்து இருந்தது.
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம், வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பிரதேசங்கள் என எழுத்து ரீதியாக முதலில் வடிவமைக்கப்பட்டு அது சட்ட திருந்தமாக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் வற்புறுத்தலினால் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு இதனை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜே. ஆரிற்கு பின்னர் பதவியேற்ற பிரேமதாசா புலிகளுக்கு பண ஆசையையும், ஆயுத ஆசையும் காட்டி இந்திய படையினருடான மோதலை ஊக்கு வித்து தாயக கோட்பாட்டினையே இல்லாதாக்கினார்.
புலிகள் மட்டும் 13 ஆவது சட்ட திருத்தத்தினை எதிர்க்காது, இந்திய படையினருடன் மோதாது இருந்திருந்தால்!
வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே ஆட்சிக்குள் ஆளப்பட்டு இருப்பதோடு, வட கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பிரதேசம் என்று இந்தியா வகுத்து கொடுத்த சட்ட திருத்தம் இன்றும் நிலைத்திருக்கும். பிரபாகரனும் உயிருடன் இருந்திருக்க முடியும். இலங்கை தமிழர் பிரட்சனைக்காகவா ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றார்கள்? சுவீடன் நாட்டை சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனமான போபர்ஸ் (Bofors) நிறுவனத்திடம் இருந்து இந்தியா பீரங்கி கொள்வனவு செய்ததில் ஊழல் நிகழ்த்தப்பட்டதாக ராஜீவ் காந்தி மீது எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி இருந்ததுடன் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படு இருந்தது.
பின்னர் ராஜீவ் காந்தியின் பெயர் இந்த ஊழல் குற்றசாட்டில் இருந்து நீங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போபர்ஸ் பீரங்கி கொள்வனவில் தரகராக ஈடுப்பட்டு இருந்த இத்தாலிய நாட்டவரான Otaavio Quattrocchi மீது இந்திய மத்திய புலனாய்வு சபையான சீ.பி.ஐ (Central Intelligent Bureau,CBI) வழக்கு தாக்கல் செய்ததோடு விசாரனைக்காக அவரை இந்தியாவிடம் கையளிக்க வேண்டுமென கோரியும் இருந்தது. (இந்த இத்தாலியர் ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பர் என கூறப்படுகின்றது.) மேலும் இவரை கைது செய்யுமாறு சர்வதேச பொலிசாரிடமும் சி.பி.ஐ கேட்டு இருந்தது. இதில் இருந்துதான் புலிகள் ராஜீவ் காந்தி மீதான தற்கொலை தாக்குதலை மேற்கொவதற்கான உந்துதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய படையினர் அனுப்பப்பட்டு, பின்னர் 1989 ஆம் ஆண்டு இறுதியில் முற்றாக திருப்பி அழைக்கப்பட்டு இருந்தனர். இவ்வேளை ஆட்சியினை இழந்திருந்த ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தேர்தலில் அமோக ஆதரவுடன் வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ராஜீவ் மீண்டும் ஆட்சிக்கு வருவாரானால் எதிர் கட்சிகள் மீண்டும் போபர்ஸ் ஊழல் விவகாரத்தினை ராஜீவ் காந்தி எதிராக பாவிக்க முனைவார்கள். அப்பொழுது ராஜீவ் காந்தி தன்னை நீரூபிப்பதற்கு முயலும் பொழுது தனது பெயர் மீண்டும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நினைவு படுத்தப்படும், இதனால் தனக்கு மேலும் சங்கடங்கள் ஏற்படும் என்பதினை இத்தாலிய ஆயுத தரகர் புரிந்து கொண்டார். அத்துடன் சி.பி.ஐ மற்றும் இன்ரபோல் ஆகியன மீண்டும் தன்னை துரத்த ஆரம்பிக்கும் என்பதினையும் புரிந்து கொண்டார்.
இந்த தொந்தரவில் இருந்து தான் விடுபட வேண்டுமானால், ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வருவதினை தடுக்க வேண்டும், ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வருவதினை தடுக்க வேண்டுமானால், அவரை இல்லாது ஒழிக்கவேண்டும் .இதனையே இத்தாலிக்காரர் ஆன ஆயுத தரகர் Otaavio Quattrocchi செய்வதற்கு முயன்று இருந்தார்.
ராஜீவ் காந்தியினை இல்லாது செய்வதற்கு யாரை பாவிக்கலாம் என்று அவர் இந்தியாவில் இருக்கும் ஆயுத அமைப்புக்கள் குறித்து ஆராய்ந்த போது, இந்திய படையினரால் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தமது போராளிகளை இழந்த புலிகள் ராஜீவ் காந்தி மீது கடும் கோபம் கொண்டிருந்த விடயம் இவரின் கவனத்திற்கு சிலரால் கொண்டுவரப்பட்டது.
பணத்திற்காகவும், ஆயுதத்திற்காகவும் அலைந்து திரிந்த புலிகள் இவரின் வலைக்குள் அகப்பட்டு கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பாக புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தினை இந்தாலிய ஆயுத தரகர் Otaavio Quattrocchi அவர்கள் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் (France,Paris) நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து மற்றும் ஒரு ஆயுத தரகருடன் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டதாக ஜேன் என்கின்ற சர்வதேச புலனான்ய்வு சஞ்சிகை தெரிவித்து இருந்தது. இவர்களின் இந்த சந்திப்பினை பிரான்ஸ் நாட்டு புலனாய்வு துறையான Direction de la Surveillance du Territoire, DST, (France’s Domestic Intelligence Agency.) நிறுவனம் அறிந்து கொண்டதுடன் இதனை இந்திய புலனாய்வு துறையினருக்கு அறியப்படுத்திய தாகவும் அந்த சஞ்சிகையில் கூறப்பட்டு இருந்தது.
பெருமளவு நிதியும், ஆயுதங்களும் பெற்றுக்கொள்வதற்காக புலிகள் இத்தாலி நாட்டு தரகரின் சூழ்சிக்குள் வீழ்ந்து போனார்கள். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக உலகில் இருந்த ஒரே நாட்டின் ஆதரவினை அகற்றுவதற்கான அடிக்கல்லை அன்றே புலிகள் நாட்டியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான தமது போராளிகள் இந்திய படையினரால் கொல்லப்பட்டத்திற்காகவும், தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டத்திற்காகவும் ராஜீவ் காந்தி மீதான தற்கொலை குண்டு தாக்குதலை நிகழ்தியதாக தமது ஆதரவாளர்கள் மத்தியில் புலிகளினால் பரப்புரைகள் செய்யப்பட்ட போதிலும், பணத்திற்காகவும் ஆயுதங்களுக்காவும் புலிகள் அன்னிய சக்திகளின் வலைக்குள் அகப்பட்டு கொண்டார்கள் என்பதே உண்மையாகும்.
இந்தியா ஒருமைப்பாட்டிற்கு எதிரான செயற்பாடுகளை 1990 ஆம் ஆண்டிலேயே புலிகள் ஆரம்பித்து இருந்தார்கள்!
இந்தியாவின் ஒருமை பாட்டினை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ராஜீவ் காந்தியினை கொலை செய்வதற்கு முன்பாகவே புலிகள் ஆரம்பித்து இருந்தனர். ராஜீவ் காந்தி 1991 ஆம் மே மாதம் புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டு இருந்தார். 1990 ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் புலிகளிடம் பயிற்சி பெறுவதற்காக தமது அமைப்பினை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் யாழ்பாணம் சென்று இருந்தாக அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் தற்பொழுது தெரிவித்துள்ளார். அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் (United Liberation Front of Assam, ULFA) முன்னாள் பேச்சாளரும் தற்போதைய ஊடகவியலாளருமான சுனில் நாத் இது தொடர்பாக இந்திய ஊடக நிறுவனமான IANS இற்கு கடந்த 14 ஆம் திகதி (2009-11-14) தெரிவிக்கையில் “ புலிகள் இயக்கத்திடம் நாங்கள் 1990 ஆம் ஆண்டில் பயிற்ச்சி பெற்றதோடு அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பெற்றுக் கொண்டோம்.
யாழ்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வேளை அவர்களிடம் பயிற்சிக்காக சென்றிருந்த எமது உறுப்பினர்கள் இரண்டாம் கட்ட தலைவரான மாத்தையா சந்தித்து இருந்தார்கள்”.இந்திய செய்தி ஸ்தாபனம் ஆன IANS தொலைபேசி ஊடாக அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் பேச்சாளரை செவ்வி கண்ட போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் “தமிழகத்தினை சேர்ந்த ஒரு அரசியல் வாதியூடாகவே புலிகளுடன் தாம் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும், அந்த அரசியல் வாதியே தம்மை புலிகளிடம் அறிமுகப் படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“புலிகளின் பயிற்சிகள் கடுமையாக இருந்தமையினால் பயிற்ச்சிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்னராக ஒரு கிழமையில் எமது உறுப்பினர்கள் இந்தியா திரும்பியிருந்தனர். எமது உறுப்பினர்கள் இந்தியா திரும்பும் வேளையில், 20 வயது மதிக்க தக்க புலி உறுப்பினர் ஒருவர் எம்முடன் எமது முகாமிற்கு வந்திருந்தார்” மேற்கண்டவாறு புலிகளிடம் பயிற்சி பெற்றுவிட்டு தற்போது வியாபாரத்தினை மேற்கொண்டுவரும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் ஆயுததாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியிடம் இருந்து அண்மையில் இந்திய படையினரால் கைப்பற்றப்பட்ட சில ஆதாரங்களில் மூலம் அவர்கள் புலிகளிடம் இருந்து இந்திய தொகை2.3 மில்லியன் ரூபாவிற்கு ஆயுத கொள்வனவு செய்தமை தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பின் முன்னாள் பேச்சாள் சுனில் நாத் தெரிவித்து உள்ளார். இதேவேளை புலிகள் அசாம் ஆயுதாரிகளுக்கு மட்டும் அல்ல தமிழகத்தினை சேர்ந்து இளைஞர்களுக்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார்கள், ராஜீவ் காந்தி மீதான தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் நாம் அவர்களை அனைவரையும் இனம் கண்டு கைது செய்து செய்திருந்தோம் என இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களின் விடுதலைக்காக போராடுவதற்கு ஆரம்பித்த புலிகளின் தலைமையை பணத்தை காட்டியும், ஆயுதங்களை காட்டியும் பல சக்திகள் பாவித்து கொண்டன. மறுபுறத்தே இந்திய படையினருடன் மோதியதின் விளைவாக ஏற்பட்ட பகமைக்கு பழி தீர்ப்பதற்காக புலிகள் இந்தியாவிற்கு எதிரான அணியில் தம்மை இணைத்து கொண்டார்கள். நோர்வேயின் மத்தியஸ்துவத்தில் புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடத்தி வந்தபோது, இந்தியாவும் இந்த பேச்சுக்களில் இணைத்து கொள்ளப்பட வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டது. பிரட்சனைக்கான இரு தரப்பும் நோர்வேயின் மத்தியஸ்துவத்தில் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றபோது நான்காம் தரப்பு ஒன்று இதற்குள் தேவையில்லையென புலிகளின் ஆலோசகராக அப்போது இருந்த காலசென்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்து இருந்தார்.
இந்தியாவிற்கு எதிரான சக்திகளை மகிழ்விப்பதற்காகவே இந்த அறிக்கையினை அவர் விடுத்து இருந்தார். தென்கிழக்காசியாவில் இந்தியா பலமாக இருப்பதையும், சர்வதேச அளவில் வல்லரசாக இருப்பதினனயும் விரும்பாத சக்திகளின் வலையில் புலிகள் சிக்கிக் கொண்டு இருந்தமையினால், அவர்களினால் இந்திய உறவினை வளர்த்துக் கொள்ள முடியாது போனது. இந்திய படையினருடன் மோதியிருந்த புலிகள் அத்துடன் நிறுத்தி கொள்ளாது, இந்திய எதிரணியில் தம்மை இணைந்த்து கொண்டு, இந்தியாவை தம்மால் கூறு போடலாம் என்று எண்ணினார்கள். அந்த நாட்டின் பிரதான தேசிய கட்சியின் தலைவரை திட்டமிட்டு கொன்றார்கள். இவர்களின் இந்தகைய நடவடிக்கைகள் விடுதலை போராட்ட அமைப்பு என்ற நிலையில் இருந்து விலக்கி, தீவிரவாத பட்டியலுக்குள் சிக்கி கொள்ள வேட்டியதாயிற்று.
1983 ஆம் ஆண்டில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரையில் தனது தென்மானிலத்தில் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து, பணம் கொடுத்து ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வந்த அயல் நாடு, பின்னர் ஏன் இவர்கள் குறித்து கண்டு கொள்ளாது போனது.வடமராட்சியை மீற்பதற்காக படையினர் தாக்குதலை மேற்கொண்ட போது இரண்டு இராட்சத யுத்த வீமானங்களின் துனையுடன் உணவு போதிகளை வீசி இலங்கையை மிரட்டிய இந்தியா ஏன் புதுமத்தாளனுக்குள் மக்கள் சிக்கிக் கொண்ட போது மெளனியாக இருந்தது. அன்று பிரபாகரனுக்கு தஞ்சம் கொடுத்த இந்தியா ஏன் பின்னர் தனது கரையோர பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி இந்தியாவிற்கு எவரும் புகுந்து கொள்ளாத வரையில் பார்த்துக் கொண்டது. இவைகள் எல்லாம் புலிகளின் தீவிர விசுவாசிகளுக்கு புரிந்து கொண்டாலும், தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவர்களுக்கு இன்னமும் வரவில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வீதி மறிப்பு போராட்டங்களையும், உண்ணாவிரத போராட்டங்களையும் புலிகளின் ஆதரவாளர்கள் நிகழ்த்தியும் அருகில் இருந்த இந்தியா நினைத்ததே நடந்தேறியது.
மே மாதம் 18 ஆம் திகதி பிரபாகரனும் மேலும் புலிகளின் பிராதான தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டதின் பின்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் “ புலிகள் செய்த தவறுகளில் மாபெரும் தவறு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியினை கொலை செய்ததே ஆகும் “என்று கூறியிருந்தார். இந்த செய்த்¢யானது ஜனாதிபதினால் புலிகளுக்கு சொல்லப்பட்டது என்றே பலரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் ஜனாதியினால் இந்தியாவிற்கு மறைமுகமாக கூறப்பட்ட செய்தியாகவே இது இருந்தது. அது என்னவெனில் இலங்கையில் பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக மட்டும் நீங்கள் எங்களுக்கு உதவவில்லை, இலங்கை ஒரு அயல் நாடு என்பதற்காக நீங்கள் எங்களுக்கு உதவவில்லை, உங்கள் நாட்டு தலைவரை கொன்றவருக்கு தண்டணை வழங்குவதற்காகவே நீங்கள் எங்களுக்கு உதவியிருந்தீர்கள்இ புலிகள் மட்டும் ராஜீவ் காந்தியினை கொலை செய்யாது இருந்தால், நீங்கள் எப்படியும் இந்த யுத்தத்தினை நிறுத்தி பிரபாகரனை காப்பாற்றி இருப்பீர்கள். ஜனாதிபதி கூறிய செய்தி இவ்வாறான உள் அர்த்தத்தினை உள்டக்கியதாகவே இருந்தது.
புலிகளின் தலைவர் இந்திய எதிர்ப்பு சக்திகளின் தரப்பில் தன்னை இணைந்து கொண்டிருந்தமையினால், யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தி இறுதி நேரத்தில் அவரை பிழைக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தென் கிழக்காவியாவிற்குள் குறிப்பாக இலங்கைக்குள் இந்தியாவிற்கு எதிராக குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முடியாது என்பதினை இந்தியா காண்பித்து விட்டது. பிரபாகரன் உயிருடன் கைது செய்யப்பட்டு அவரை இலங்கை தம்மிடம் ஒப்படைத்தால்! தமிழகத்தில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்ப்படும், ஆகையினால் அவரு உயிருடன் பிடிபடக் கூடாது என்ற எண்ணங்கள் டெல்லி தரப்பில் இருந்தாக பேசப்பட்டது.
18 வருடங்கள் காத்திருந்து தமது ஒருமைப்பாட்டிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியவரும், தமிழகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டவரும், தமது முன்னாள் பிரதமரை திட்டமிட்டு கொன்றவருமான புலிகளின் தலைவருக்கு தன் கை படாது இந்தியா சாதூர்யமாக தண்டணை வழங்கியது. இந்திய எதிர்தரப்பில் பிரபா தன்னை இணைந்துக் கொண்டமையினால், அவரின் எதிர்காலம் இறுதிக் காலமாகி போனது.

Thursday, November 26, 2009

கீதசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்ததுஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறதுஎது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்உன்னுடையதை எதை நீ இழந்தாய்?எதற்காக நீ அழுகிறாய்?எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?எதை நீ எடுத்து கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.எது இன்று உன்னுடையதோஅது நாளை மற்றொருவருடையதாகிறதுமற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

ஒருநிமிடக்கதை 1



நண்பர்கள் ஒரு சேர்ந்து ஒரு பெரிய ஃப்ளாட்டில் 110 வது மாடியில் வசித்துவந்தனர்.ஒரு முறை வெளியே சென்று வரும் பொழுது கரண்ட் இல்லாததால் நடந்தே மேல் வரை செல்ல வேன்டி இருந்தது.110வது மாடி வரை செல்ல போர் அடிக்கும் என்பதால் ஆளுக்கு ஒரு கதை சொல்வது என்று முடிவெடுத்து கதை சொல்ல ஆரம்பித்தனர்.முதலில் ஒருவன் காதல் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதை சொல்லி முடிக்கும் போது 50 மாடிக்ளை கடந்திருந்தனர்.அடுத்தவன் ஒரு நகைச்சுவை கதையை ஆரம்பித்தான்.அவன் முடிக்கும் பொழுது 100 மாடிகளை கடந்து விட்டிருந்தனர்.இன்னும் 10 மாடிகள் தான் பாக்கி என்பதால் மூன்றாமவன் தான் ஒரு சிறிய சோக மான கதை சொல்லவிருப்பதாக கூறி சொல்லி முடிக்கவும் மற்ற இருவரும் அவன் கதையை கேட்டவுடன் மயங்கி விழுந்தனர்.அப்படி என்ன கதை அது.........அவன் கூறிய கதை..வீட்டு சாவியை மறந்து காரிலேயே மறந்து விட்டதாக கூறினான்.

விடாமுயற்சி

படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையைஇழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவைஇழக்க முடியவில்லை.
அந்தக் கனவை அவரும் அவர் தந்தையும் சேர்ந்து கண்டிருந்தார்கள். நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட இருவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள்சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள்.
பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள்.
சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.
மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி முதல் வேலையாக வாஷிங்டன் ரோப்ளினின் வீட்டுக்குச் சென்று அவருடைய கைகளைக்குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
இதற்குப் பெயரல்லவோ விடாமுயற்சி. ஒரு சாதாரண மனிதன் தன் முயற்சியை முடியாது என்ற வல்லுனர்களின் கருத்திலேயே நிறுத்தியிருப்பான். சற்று மன உறுதி படைத்த மனிதனோ தந்தையின் மரணத்தில் அந்த நம்பிக்கையை இழந்திருப்பான். மேலும் அதிக மன உறுதி படைத்தவன் தனக்கும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த வேலையையே விட்டொழித்திருப்பான். ஆரம்பத்திலிருந்தே அபசகுனங்கள் வந்தும் நாம் முயற்சி செய்தது மகா முட்டாள்தனம் என்று நினைத்திருப்பான்.
முடக்க நிலையில் படுக்க நேர்ந்தாலோ எத்தனை மன உறுதியும் உபயோகப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மரணம் மட்டுமே எதிர்பார்க்கத்தக்க பெரிய விடுதலையாக நினைக்கத் தோன்றியிருக்கும். ஆனால் இதெல்லாம் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நடக்கக் கூடிய நிகழ்வுகள். மாமனிதர்களோ விதிகளை உருவாக்குபவர்கள். பொதுவான விதிக்கு அடங்குபவர்கள் அல்லர்.
மனதிற்குள் ஒன்று சரியெனப்படுகையில், தலைக்கனமோ, முட்டாள்தனமோ துளியும் இல்லாமல் ஒன்றை முடியும் என உணர்கையில், உலகமே முடியாது என்று மறுத்தாலும், விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து முடங்கிக் கிடக்க வைத்தாலும் மாமனிதன் நினைத்ததை நடத்தியே முடிக்கிறான். சுற்றிலும் இருள் சூழ்ந்த போதிலும் தன் ஆத்மவிளக்கால் போகும் வழியைக் காண்கிறான். தன் ஆத்மபலத்தால் இலக்கைச் சென்றடைகிறான்.
நண்பர்களே, தொடங்கிய நல்ல காரியங்களுக்குத் தடங்கல் வரும் போதெல்லாம் செயலற்று நின்று விடாதீர்கள். வாஷிங்டன் ரோப்ளினை நினைத்துப் பாருங்கள். அவர் கண்டது எத்தனை தடங்கல்கள், எத்தனை துன்பங்கள். கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மோசமான சூழ்நிலைகள் சூழ்ந்த போதும் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் அவர் அவற்றிலிருந்து விடுபட்டு செயல்படவில்லையா? கடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே என்றாலும் அவர் அதை வைத்துக் கொண்டே சரித்திரம் படைக்கவில்லையா? அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள்.
உங்கள் கனவுகளுக்கு நீங்களே பிரம்மாக்கள். அவற்றிற்கு நீங்கள் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப் போவதில்லை. நீங்கள் கனவாக மட்டுமே விட்டு வைத்த உயர்ந்த விஷயங்கள் எத்தனை? அவை உருவாக ப்ரூக்ளின் பாலத்திற்காக வாஷிங்டன் ரோப்ளின் செய்த முயற்சிகளின் அளவில் சிறிதாவது செய்திருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை உங்களைச் செயல்புரிய வைக்கட்டும்.

இந்திய அமெரிக்கா அணுசக்திஒப்பந்தம்

நாள்: 1974ம் ஆண்டு 18ம் தேதி காலை 7 மணி...இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி.எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர்.இடம்: டெல்லி. காலை 8 மணி.பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்..மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'.மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது.இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும்.சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு.ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின.வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை.இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர்.சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா.அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின.அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான்.அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம்.நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும்.நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான்.ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன.1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின.சோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது.அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது.இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர்.1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).இந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது.ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான்.1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம்.நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன.ஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி.இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது.மேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா.அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது.அதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது.ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது.இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார்.இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார்.ஆனால்....1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில்ஒரு நாள்..மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள்.அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை.பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம்.அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்....போக்ரான்...அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம்.'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார்.மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம்.அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர்.பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான்.அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்..அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம்.இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.(அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்)இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா!ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை.இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம்.அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது.தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை.இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா.இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள்.இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது.இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான்.இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர்.இதற்கு அதிபர் புஷ்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது.அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான்.Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா.NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது.ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா.இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங்.சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்).சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம்.ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான்.'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான்.இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்...

Wednesday, November 25, 2009

அண்ணாவின் பேச்சாற்றல்

அண்ணா அவர்களின் வாழ்க்கையில் 1962 ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு. அந்த ஆண்டிலிருந்துதான் அண்ணா அவர்களின் குரல் தமிழ் நாட்டில், தமிழ் தெரிந்தவர்களின் செவிகளில் மட்டுமே பாய்ந்து மகிழ்வித்துக் கொண்டிருந்த நிலைக்கு அடுத்த கட்டமாக, நாட்டின் தலை நகரில் ஓர் அதிகாரப் பூர்வமான அவையிலிருந்து ஹிந்துஸ்தானம் முழுவதும் கேட்கலாயிற்று.
தேசப் பிரிவினையை வலியுறுத்தும் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியின் தலைவரே பாராளுமன்றத்திற்கு வந்திருப்பதால் அவர் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லுமே அவரது கட்சியின் அதிகாரப் பூர்வமான அறிக்கையாகவும் பிரகடனமாகவும் இருக்குமாதலால் அவர் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம், வட நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமின்றி, தில்லியில் குவிந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும் தோன்றி, அண்ணா மாநிலங்களவையில் பேசுகின்ற தினங்களை எல்லாம் முன்னதாகவே விசாரித்துத் தெரிந்துகொண்டு அவர்கள் வரத் தொடங்கியதால் பார்வையாளர்கள் மாடத்தில் கூட்டம் நிரம்பலாயிற்று. அவையிலோ, நிலைமையைச் சொல்லவே வேண்டாம்; அண்ணாவின் முதல் பேச்சைக் கேட்கத் தவறிய உறுப்பினர்கள், கேட்கும் வாய்ப்பினைப் பெற்ற உறுப்பினர்களின் வாயிலாக அண்ணாவின் பேச்சில் இருந்த மொழி ஆளுமையினையும் பொருட்சுவையினையும் கேள்வியுற்று, அதனைக் கேட்கும் வாய்ப்பினை இழந்து விட்டமைக்காக வருந்தி, அதன் பிறகு அவரது பேச்சைக் கேட்கும் வாய்ப்பினை இழக்கவே கூடாது என்று சங்கற்பித்துக் கொண்டுவிட்டிருந்தார்கள். பிரதமராக இரு ந்த ஜவஹர்லால் நேருவுக்குக் கூட தேசப் பிரிவினை கோரும் கட்சியின் தலைவர் முகத்தைப் பார்க்கும் ஆர்வம் மிகுந்து, தமது அமைச்சரவை சகாவாகியிருந்த சி. சுப்பிரமணியத்திடமும், துணைக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடமும் அண்ணாவைப் பற்றி விசாரித்தார். "இவர் எங்கள் மாநிலத்தின் டிஸ்ரேலி' என்று ராதாகிருஷ்ணன் நேருவிடம் சொன்னாராம் (1800 களின் மையப்பகுதியிலிருந்து ஏறத் தாழ இறுதிக் கட்டம் வரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நட்சத்திரமாக ஜ்வலித்தவர் பெஞ்சமின் டிஸ்ரேலி. கன்சர்வேடிவ் எனப்பட்டும் மிதவாதக்கட்சியின் பிதாமகரான டிஸ்ரேலி, மூன்று முறை பிரதமராகவும் இடையில் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்து, தமது வாதத் திறமையினாலும் பேச்சாற்றலாலும் கீர்த்திபெற்று விளங்கினார்).
மாநிலங்களவையில் அண்ணாவின் முதல் பேச்சைக் கேட்கும் வாய்ப்பபினைப் பெற்ற ஜன சங்கத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயி, "அண்ணாவின் பேச்சு அவையில் இருந்த அனைவரையுமே கவர்ந்தது. தமது முதல் பேச்சாலேயே அவர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார்' என்று சொன்னார். அதன் பிறகு அண்ணாவுடன் நெருக்கமாகப் பழகவும் தொடங்கி, அண்ணாவின் அபிமானிகளுள் ஒருவராகிவிட்டார். அண்ணாவும் வாஜ்பாயியிடம் மிகவும் நெருங்கிப் பழகி, அவரது பேச்சாற்றலைப் பாராட்டினார்கள் ("மா நிலங்களையில் ஜன சங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயி என்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். அவர் ஹிந்தியில்தான் பெரும்பாலும் பேசுகிறார். அவர் பேசுவது புரியவில்லை என்றாலும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. அவர் பேசுவதை பிரதமர் நேருவிலிருந்து அனைவருமே மிகவும் சுவாரசியமாகக் கேட்கிறார்கள்' என்று அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்).
அண்ணா அவர்கள் ஓர் உறுப்பினராக மா நிலங்களவைக்கு வந்ததே ஒரு விபத்துதான். ஆனால் அந்த விபத்து நன்மை விளைவிக்கும் விபத்தாக, அவரை அகில பாரத அளவில் ஒரு முக்கியத் தலைவராக உயர்த்தியது. அந்த நல்விபத்தை 1962 ல் நடந்த பொதுத் தேர்தல் உருவாக்கித் தந்தது. அந்தத் தேர்தலின்போது தமிழக சட்டமன்றத்தில் இடம் பெறுவதற்குத்தான் அண்ணா போட்டியிட்டார்கள்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1962 பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1957ல் தமது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்திலிருந்து சட்டமன்றத்திற்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா அவர்கள் இரண்டாம் முறையும் அங்குதான் போட்டியிட்டார்கள்.
அந்தச் சமயத்தில் சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாகவே மாறிவிட்டிருந்தது. சென்னையில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தமக்கு வெற்றி நிச்சயம் என்பது கண் கூடாகத் தெரிந்த போதிலும், அண்ணா அவர்கள் தமது சொந்த ஊரான காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட சட்டமன்றத் தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்தார்கள். மாநிலத்தின் தலைநகரமான சென்னையைச் சேர்ந்த ஒரு தொகுதியிலிருந்து மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது அண்ணாவின் ஆளுமைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சிலர் சொல்லியும்கூட அண்ணா அவர்கள் அதற்கு ஒப்பவில்லை. தொகுதி மாறி நிற்பதே மக்களிடையே செல்வாக்கை இழந்து, தோல்வியை ஒப்புக் கொள்வது போலாகிவிடும் என்று அண்ணா கருதினார்கள். ஒருவரே கூடுதலான தொகுதிகளில் நிற்பதையும் அண்ணா நெறிமுறைக்குப் புறம்பானதாகவே எண்ணினார்கள். மக்களின் ஆதரவு குறித்துச் சந்தேகப்படுவதன் அறிகுறி என்று அதனை அண்ணா கருதினார்கள். விரும்பியிருந்தால் அண்ணா சென்னையில் ஒரு தொகுதியிலும் காஞ்சியிலுமாகக் கூடப் போட்டியிட்டு, எப்படியும் தமிழக சட்டமன்றத்திற்குச் சென்றுவிட்டிருக்க முடியும்.
இவ்வளவுக்கும் காஞ்சியில் தம்மைத் தோற்கடிக்கக் காமராஜர் மிகப் பெரிய வியூகம் வகுத்திருப்பதை அண்ணா அறியாமல் இல்லை. அன்றைய கால கட்டத்தில் தி.மு.க ஆதரவாளர்கள் இல்லாத துறையே தமிழ் நாட்டில் இல்லை என்னும் நிலை இருந்தது. உளவுத் துறையில் கூட அண்ணாவின் அபிமானிகள் இருந்தனர். முந்தைய தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பதினைந்து தொகுதிகளிலும் தி.மு.க. வைத் தோற்கடித்து அதனைப் பூண்டோடு கெல்லி எறிந்துவிடக் காமராஜர் சங்கற்பம் செய்திருக்கும் தகவல் அங்கிருந்து முன்னதாகவே கசிந்து வரத் தவறவில்லை. எனினும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்று அண்ணா உறுதியாக நம்பினார்கள்.
தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் பொதுவாக வாக்காளர்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறுதான் வேண்டுவார்கள். அண்ணாவோ அதற்கு நேர்மாறாகத் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமது தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கூறி வந்தார்கள்.
"எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்க வெட்கமாயிருக்கிறது' என்று சொன்னார்கள். குறிப்பாகச் சொல்லப் போனால் 1962 தேர்தலின்போது அண்ணா அவர்கள் மற்ற தொகுதிகளில் பேசுவதற்குத்தான் அதிக தினங்களைச் செலவிட்டார்கள். 1957ல் முழு மூச்சாகத் தமது தொகுதி முழுவதும் சுற்றி வந்ததுபோல 1962 தேர்தலின்போது தமது தொகுதியில் அவர் கவனம் செலுத்தாமல் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் சென்னை மாநகரத் தொகுதிகளில்தான் அண்ணா அதிக கூட்டங்களில் பேசினார்கள். போதாக்குறைக்கு மற்ற தம்பிமார்களும் அவரவர் பகுதிகளுக்கென ஆளுக்கொரு பக்கமாய் இழுத்து அலைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.
கலியாண வீட்டுத் தாம்பூலத் தட்டு மாதிரி அண்ணா அவர்களால் இழுபடுகிற பக்கமெல்லாம் போய்க் கொண்டிருந்தர்கள். தமது தொகுதியில் பேசுகின்ற வாய்ப்பு கிட்டியபோதோ, "மற்ற ஊர்களில் எல்லாம் மக்கள் என்னை மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரையிலும்தான் அறிவார்கள். ஆனால் காஞ்சிபுரத்து மக்களான நீங்களோ என்னைக் கடந்த 53 ஆண்டுகளாக அறிவீர்கள் (அப்போது அண்ணாவுக்க்கு வயது 53). நான் தெருவில் விளையாடிய நாட்களிலிருந்து, பள்ளிக் கூடம் சேன்று வந்த காலத்திலிருந்து என்னை அறிவீர்கள். இந்த 53 ஆண்டுகளில் நான் ஏதாவது கேடான செயலில் ஈடுபட்டதாக ஒரு தடவையேனும் நீங்கள் கேள்விப் பட்டிருந்தால், மனதாலும் எவருக்காவது தீங்கிழைக்க நான் எண்ணியிருப்பேன் என்று கருதினால் நீங்கள் எனக்கு வாக்களிக்காதீர்கள். எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்பதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்று கூறி வந்தார்கள். காஞ்சிபுரத்து மக்கள் தம் மீது அபரிமிதமான அன்பு வைத்திருப்பவர்கள், தமக்கு வாக்களிப்பதில் அவர்களுக்குத் துளியளவும் ஆட்சேபம் இருக்க வாய்ப்பில்லை என்று அண்ணா நம்பியிருந்தார்கள்.
தம்முடைய சட்ட மன்றக் கடமைகளைத் தாம் சரிவர நிறைவேற்றியிருப்பதால் தமக்கு வாக்குகள் விழாமல் போகக் காரணமில்லை என்று அண்ணா கருதினார்கள். முந்தைய தேர்தலிலாவது காஞ்சிபுரத்து மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமான, காங்கிரஸ் கட்சியில் வைரம் பாய்ந்த டாக்டர் ஸ்ரீநிவாசனை எதிர்த்துப் போட்டியிட வேண்டியிருந்தது. அவரையே தோற்கடித்து வெற்றியும் பெற முடிந்தது. இம்முறை அரசியலுக்கே சம்பந்தமில்லாத, மக்கள் தொடர்பு ஏதுமில்லாத ஒரு பஸ் கம்பனி முதலாளியைத்தான், அவரிடம் பண பலம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காகத் தமக்கு எதிராகக் காமராஜர் நிறுத்தி வைத்திருப்பதால் வாக்காளர்கள் தராதரம் பார்த்துத்தான் வாக்களிப்பார்கள் என்று அண்ணா அவர்கள் நம்பினார்கள். ஆனால் போகப் போகத்தான் பிரத்தியட்ச நிலவரம் புரியத் தொடங்கியது. ஆனாலும் அபிமன்யுவைப் போல காமராஜரின் வியூகத்திற்குள் நுழைந்து களப்பலியாகி விட்டார்கள்.
1957ல் காஞ்சியில் தாம் சந்தித்த தேர்தலுக்கும் 1962ல் தாம் சந்திக்கும் தேர்தலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து, அதனை மேடைகளில் வெளியிடவும் அண்ணா தவறவில்லை.
"1957ல் விவாதத்திற்கு விவாதம், புள்ளி விவரத்திற்குப் புள்ளி விவரம் என்றுதான் போட்டி இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், தேர்தல் சமயத்தில் ஒரு நாள் இரவு வயிற்று வலி தாங்காமல் டாக்டர் ஸ்ரீநிவாசன் அவர்களைத்தான் ஃபோனில் அழைத்தேன். அவர் உடனே வந்து பார்த்து மருந்து கொடுத்து, முதுகில் இரண்டு தட்டுத் தட்டி, "அதிகம் கத்திப் பேசாதே' என்று சொல்லிவிட்டுப் போனார். அப்படித்தான் நடந்தது அந்தத் தேர்தல். இன்றோ ஒரு சாதாரண அரசியல் கட்சிக்காரனான என்னை எதிர்ப்பதற்காக ஏழுமலைகள் தாண்டி இருக்கிற வெங்கடாசலபதி பெருமாளை அழைத்து வந்து தட்டில் ஐந்து ரூபாய் பணம் வைத்து, அவரையும் வைத்து காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு கற்பூரத்தில் சத்தியம் வாங்கிக் கொள்வதாக இருக்கிறது" என்று அண்ணா அவர்கள் வருந்தினார்கள்.
"ஒரு அதர்மமான காரியத்திற்கு அந்த தெய்வத்தை அழைத்து வருவது "கோவிந்தனாவது, கோபாலனாவது' என்று சொல்கிறவர்களைவிட துரோகமான செயல்' என்று அண்ணா சொன்னார்கள். "அப்படியொரு அதர்மத்திற்கு அந்த தெய்வம் துணை போகுமா?" என்றும் அண்ணா கேட்டார்கள்.
அண்ணா அவர்கள் அவ்வாறெல்லாம் நியாயம் கேட்டுங்கூட, காஞ்சிபுரம் சட்ட மன்றத் தேர்தலில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியுற நேர்ந்தது.
காஞ்சி தொகுதியின் பிரதிநிதியாக சட்ட மன்றத்தில் பணியாற்றியபோது அண்ணா அப்படியொன்றும் தொகுதி நலனைக் கவனிக்காமல் இருந்து விடவில்லை. தண்டலம் என்ற இடத்தில் ஒரு ஆட்சியாளர்அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, முதல்வர் காமராஜரையே அழைத்து வந்து, தமது தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நலத் திட்டங்கள் குறித்துப் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் வழிசெய்தார். ஆனால் ஒப்புதல்களை அரசாங்கம் வெறும் சம்பிரதாயமான தலை அசைப்புகளோடு விட்டு விட்டது. காஞ்சியில் நெசவாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் ஒன்று அமைய அரசின் ஒப்புதலைப் பெறவும் அண்ணா முயற்சி மேற்கொண்டார். அதுவும் கைகூடவில்லை. மேலும், தொகுதியைச் சேர்ந்த கிராமப் புறங்களின் மீது போதிய கவனம் செலுத்த அண்ணா தவறிவிட்டிருந்தார்கள். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் மாநில நலன் முழுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை இருந்ததால், தமது தொகுதியின் நலன்களைக் குறிவைத்து அதே நினைவாக அண்ணாவால் செயல்பட இயலவில்லை.
அன்றைய பொருளாதார நிபுணர்கள் பலருக்கும் இருந்த எண்ணப் போக்கே அண்ணாவுக்
கும் இருந்தது இன்னொரு துரதிருஷ்டம் என்று கூற வேண்டும். சுற்றுப் புறச் சூழல் என்கிற கருதுகோள் அன்று மையம் கொள்ளவில்லை. பொருளாதார வளத்திற்கு விவசாயத்தை நம்பிப் பிரயோசனம் இல்லை என்பது போலவும், பெரிய தொழில்கள் நிறுவப்படுவதன் மூலமாகத்தான் மக்களின் வருவாயும் வாழ்க்கைத் தரமும் உயரும் என்றும் ஓர் எண்ணம் வலுவாக இருந்தது. அண்ணாவும் நிலம் என்பது வளர்ந்து பெருகக் கூடியது அல்ல
வாதலால் ஒரு அளவுக்குமேல் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி காண இயலாது என்று கருதினார்கள். ஆகவே தமது தொகுதியில் புதிய பெருந் தொழில்கள் தொடங்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிப்பதிலேயே அண்ணாவின் எண்ண ஓட்டம் இருந்தது. அந்த மாயமான் வேட்டையிலேயே அண்ணாவுக்கும் கவனம் சென்றது. தமது தொகுதியில் விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும் அமைவதில் அண்ணா ஈடுபாடு கொண்டிருந்தால், தொகுதியின் கிராமப் புறங்களிலும் அண்ணாவுக்கு அசைக்க முடியாத ஆதரவு வேரூன்றியிருக்கும். வெங்கடாசலபதி பெருமாளுக்கு முன்பான ஐந்து ரூபாய்த் தாளுக்காக வாக்குச் சீட்டுகள் விலை போயிருக்காது.
இது தவிர, புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் புறக்களிலும் அதிகாரிகள் மூலமாகப் பல ஆசை காட்டுதல்களும் காங்கிரஸ் தூண்டுதலில் நடைபெற்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறித் தாம் வெற்றி பெற்றிருக்கவேண்டாமா என்றுதான் அண்ணா கேட்டார்கள். தம்மிடம்தான் குறை இருப்பதாக வெளிப்படையாகக் கூறினார்கள். மக்களுக்கு என் மீது அன்பும் நம்பிக்கையும் முழுமையாக இருக்குமானால் எத்தகைய தூண்டுதல்களுக்கும் இலக்காகிவிடாமல் வாக்காளர்கள் தம்மைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் அல்லவா என்று அண்ணா எழுதவும் பேசவும் செய்தார்கள்.
அண்ணாவின் தோல்வியால் அவருடைய கட்சியினர் மாத்திரமல்லாமல் ஆரோக்கியமான ஜனநாயகத்தை விரும்பிய அனைவருமே வருந்தினார்கள். அண்ணாதான் அவர்களை
யெல்லாம் தேற்றினார்கள்.
முந்தைய தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகளில் முனைந்து வேலை செய்து அதனைத் தோற்கடிப்பதில் காமராஜர் வெற்றியடைந்த போதிலும் ஐம்பது தொகுதிகளில் அது வெற்றி பெற்றுவிட்டது. ஒரு சிறு ஓட்டையை அடைக்கப் போய் பெரும் பிளவையே எதிர்கொள்ள நேர்ந்தது கண்டு காமராஜர் திகைத்தார்.
ஆனால் காங்கிரஸ் ஆதரவு இதழ்கள், தலையில்லாத முண்டமாக தி.மு.க. சட்டமன்றத்தினுள் நுழைந்திருப்பதாக ஏளனம் செய்தன. தளகர்த்தன் தனது படையினை இழந்து தான் மட்டும் கோட்டைக்குள் நுழைய நேரிட்டால்தான் நகைப்புக்
கிடமாகும்; மாறாக, படைத் தலைவன் வெளியே நிற்க, அவனது படை கோட்டைக்குள் அணிவகுத்துச் செல்வது படைத் தலைவனுக்குப் பெருமையே யாகும் என்று சொன்ன அண்ணா, அதற்கு எடுத்துக் காட்டாக ஒரு சரித்திரச் சம்பவத்தை அழகாக நினைவூட்டினார்கள். உலக சரித்திரத்தையே கரைத்துக் குடித்திருந்த அண்ணா அவர்கள் ஐரோப்பிய வரலாற்றின் மிக முக்கிய ஏடுகளான சிலுவைப் போர்களிலிருந்து ஒரு பகுதியை இதன் பொருட்டு எடுத்துச் சொன்னார்கள்.
ஜெருசலேம் நகரம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் ஆகிய மூன்று சமயப் பிரிவினருக்குமே புனிதமான தலம். அதனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த முகமதியர்கள், சமரச மனப்பான்மையின்றி, மற்ற மதத்தினருக்கு அதன் மீதுள்ள உரிமையை மறுத்தனர். உண்மையில், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான் ஜெருசலேம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தலம். அதனை மீட்பதற்காகக் கிறிஸ்தவ அரசுகள் சலிக்காமல் போரிட்டன. இங்கிலாந்து மன்னன் ரிச்சர்டு அநத் முயற்சியில் இறங்கியபோது, சுல்தான் சலாவுதீன் இயன்ற மட்டும் அதனைத் தடுத்தான். இறுதியில் இரு தரப்பினரும் ஒரு சமாதானத்திற்கு வர வேண்டியதாயிற்று. ரிச்சர்டு மன்னனின் படை ஜெருசலேமுக்குள் நுழைய சலாவுதீன் இணங்கினான். ஆனால் ரிச்சர்டு வெளியேதான் நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். ஜெருசலேமுக்குள் கிறிஸ்தவப் படைகள் நுழைவதுதான் தனது நோக்கமாதலால் ரிச்சர்டு தனது படையை ஜெருசலேம் நகருக்குள் செல்லுமாறு பணித்துவிட்டுத் தான் மட்டும் வெளியே நின்றான். எவரும் அதற்காக அவனை ஏளனம் செய்யவில்லை. மாறாகப் பாராட்டவே செய்தனர். அந்த நிகழ்ச்சியைத்தான் அண்ணா அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்>
காஞ்சிபுரம் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்ததானது பெருமாள் அதர்மத்திற்குத் துணை போய் விட்டதாகத் தோன்றியிருக்கும். ஆனால் அண்ணாவை அங்கு தோல்வியுறச் செய்ததன் மூலம் பெருமாள் மிக நல்லதே செய்தார். அண்ணா காஞ்சியில் வெற்றி பெற்றிருந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகியிருந்திருப்பார். ஆனால் முந்தைய அவையில் அவருடன் சரிக்குச் சரியாக வாதிட்டுத் தோற்றுக் கொண்டிருந்த நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்தியில் அமைச்சராகிவிட்டிருந்த நிலையில் அண்ணாவுக்கும் சட்ட மன்ற விவாதங்களில் சுவாரசியம் குன்றிப் போய் விட்டிருக்கும். மாறாக, காஞ்சிபுரத்துத் தோல்வி, அண்ணாவை தேசத்தின் தலைநகரில், தேசம் முழுவதையும் நகர்த்திக் கொண்டிருந்த கேந்திர ஸ்தானத்தில், பாராளுமன்றத்தின் மறு அங்கமான மாநிலங்களவையில் கொண்டுபோய் அமர்த்தியது.
அண்ணாவின் பரம்பரை, விஷ்ணு காஞ்சியில் கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தொண்டூழியம் செய்யும் பாக்கியம் பெற்ற பரம்பரை. அண்ணாவை வரத ராஜர் மேலும் மேலும் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வாரேயன்றி, இருந்த இடத்திலேயேவா இருக்கச் செய்வார்?
1962 சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்த சூட்டோடு சூடாக மாநிலங்களவையில் சில உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்து, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வந்தது. சட்ட மன்றத்தில் தி.மு.க.வுக்கு ஐம்பது உறுப்பினர்கள் இருந்ததால் அது தனது சார்பில் மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் சாத்தியக் கூறு உருவாயிற்று. அந்தத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்களாக ஏழு தி.மு.க. வினர் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களை அரவணைத்துச் செல்லும் தலைமகனாக அண்ணா மாநிலங்களைவைக்குச் செல்ல வேண்டும் என்ற யோசனை எழுந்தது. முக்கியமாக தருமலிங்கம் என்ற உறுப்பினர்தான் அதனை மிகவும் வற்புறுத்தினார். அண்ணா அரைமனதுடன்தான் அதற்குச் சம்மதித்தார்கள். மாநிலங்களைக்குத் தேர்வும் பெற்றார்கள்.
மநிலங்களவையில் அண்ணா அவர்கள் தமது கட்சியான தி.மு.க.வின் சார்பில் ஒரேயொரு உறுப்பினராகத் தனந்தனியே அமர்ந்தார்கள். ஆனால் இம்முறை அபிமன்யு தன்னைச் சூழ்ந்து நின்று தாக்கியவர்களைச் சுழன்று சுழன்று எதிர் கொண்டு ஒவ்வொரு முறையும் வெற்றியுடன் மீண்டு, பெருமிதம் மிக்கவனாய் முகாமுக்குத் திரும்பலானான்.
1962 மே மாதம் முதல் தேதி அண்ணா அவர்களின் குரல் முதல் தடவையாக மாநிலங்களவையில் ஒலித்தது. குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமது கட்சியின் சார்பில் பேச அவருக்கு வாய்ப்பளிக்கப்படது.
அண்ணாவுக்கு அன்று காலையிலேயே பேசுவதற்கு நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. தேசப் பிரிவைனை கேட்கும் கட்சியை நடத்துகிறவன் வந்திருக்கிறான், என்னதான் பேசுகிறான் கேட்போம் என்று மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிகப் பெரும்பாலாகவும், பிற கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் பேச்சைக் கேட்கக் குழுமியிருந்தனர். பார்வையாளர் மாடத்தில் பல வெளிநாட்டு தூதுவரகப் பிரதிநிதி
களுங்கூடக் காணப்பட்டார்கள்.
பொதுவாக நேரம் செல்லச் செல்லத்தான் அவையில் இருக்கைகள் நிரம்பும். அன்றோ, அதற்கு விதி விலக்காக அவையே ஒரு பொதுக் கூட்டத்தில் பேச்சாளர்களுக்காகக் காத்திருக்கும் ஜனத் திரள் போலக் காட்சியளித்தது.
முதல் பேச்சிலேயே திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்திப் பேச வேண்டாம் என்றுதான் அண்ணா கருதினார்களாம் (இதனை அண்ணாவே பதிவு செய்திருக்கிறார்கள்). ஆனால் குடியரசுத் தலைவர் உரையில் தேச ஒற்றுமையை வலியுறுத்துவதாக ஒரு பகுதி அமைந்து விட்டது அண்ணாவுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. அண்ணா அவர்கள் பிரிவினை கோருவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார்கள். அதன் பிறகு பேசிய உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவின் பேச்சையொட்டியே தத்தம் கருத்துகளைக் கூறத் தொடங்கினார்கள். விவாதம் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்திற்கானது என்பதே அனைவருக்கும் மறந்துவிட்டது!
மறுநாள் நாட்டில் உள்ள நாளிதழ்கள் எல்லாம் மாநிலங்களைவையில் அண்ணா நிகழ்த்திய உரையைத்தான் பிரதானப்படுத்திச் செய்தி வெளியிட்டன. தமிழ் நாட்டைச் சேர்ந்த "தி ஹிந்து' நாளிதழ், " திரு. அண்ணாதுரை பேசிய பிறகு விவாதத்தின் போக்கே திசை மாறிவிட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் என்பதற்குப் பதிலாக, அண்ணாதுரையின் உரை மீதான விவாதமாக அது மாறிவிட்டது' என்று எழுதியது (1962 மே 2 ஆம் தேதி "தி ஹிந்து' நாளிதழ் ).
மா நிலங்களைவையில் பேசிவிட்டு வந்த அன்றே அண்ணா அவர்கள் விமானம் மூலமாக சென்னை திரும்பி விட்டார்கள். முன்னதாகவே மே 3 ஆம் தேதி முதல் தமிழ் நாட்டில் பல கூட்டங்களுக்குத் தேதி கொடுத்து விட்டிருந்ததுதான் அதற்குக் காரணம். ஆனால் தமது பேச்சுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பும், அதற்குத் தம்மால் பதில் சொல்ல முடியாது என்றுதான் அண்ணா கோழைத்தனமாக அவசரம் அவசரமாய் விமானம் ஏறி ஊர் திரும்பி விட்டார் என்று சுப்பிரமணியம் உள்ளிட்ட பல காங்கிரஸ்கார்கள் கேலி செய்தனர்.
நடைபெற்றது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்தானே யன்றி, திராவிட நாடு பிரிவினை வேண்டுமா வேண்டாமா என்ற தீர்மானம் மீதானது அல்ல என்று அண்ணா அவர்கள் அதற்கு பதிலளித்தார்கள். பாராளுமன்றத்தில் பேசும் பலரும் தாம் பேசியான பிறகு தத்தம் ஊர் திரும்புவது வழக்கம்தான் என்பதையும் நினைவூட்டிய அண்ணா, "என்ன இருந்தாலும் உனது பேச்சின் விளைவு எப்படியிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டாமா என்று கேட்பீர்களேயானால், திராவிட நாடு பிரிவினை ஒரு முக்கியமான விஷயம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?' என்று திருப்பிக் கேட்டார்கள். "வா, வா, திராவிட நாடு பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்' என்று தில்லியில் தம்மை யாரும் அழைக்கவில்லை என்பதையும் அண்ணா சுட்டிக் காட்டினார்கள்.
இதுபற்றி மேலும் கூறுகையில் அண்ணா அவர்கள் மிகச் சிறந்த உண்மையினை நினைவூட்டினார்கள். அதனை அண்ணாவின் வாக்கிலேயே தருகிறேன்:
""மக்கள் சபையாகட்டும், ராஜ்ய சபையாகட்டும், அல்லது சட்ட சபைகளாகட்டும், வழக்கு மன்றங்கள் அல்ல. அங்கு பலரும் வழக்கினை எடுத்துரைப்பதுபோலத் தத்தமக்குச் சரியென்று பட்ட கருத்துகளை ஒழுங்குமுறைப்படி எடுத்துக் கூறுவர். ஆனால் வாதங்களைக் கேட்டு, இரு தரப்புக் கருத்துகளையும் கேட்டுத் தீர்ப்பு அளிக்க அங்கு ஒருவர் கிடையாது. தீர்ப்பு என்று எதையாவது கூறுவது என்றால் ஓட்டெடுப்பினைத்தான் குறிப்பிடலாம். அந்த ஓட்டெடுப்பு கட்சிகளின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்தது என்பது அரசியல் அரிச்சுவடி விளக்கத் தேவையில்லை. மக்கள் சபையில் நமக்கு ஏழு ஓட்டுகள், ராஜ்ய சபையிலே ஒன்று!
ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால் சிலர் இங்கு நான் ஏதோ தில்லிக்கு வழக்காடச் சென்று, வழக்காடி, என் வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் வழக்கு தோற்றுவிட்டதுபோல ஒரு பேச்சுப் பேசுகிறார்களே அது எவ்வளவு பொருளற்றது என்பதை எடுத்துக் காட்டத்தான்.''
அண்ணாவிடம் வாயைக் கொடுத்துவிட்டு ஒருவர் மீள முடியுமா, அவரிடம் பேசி ஒருவர் ஜயித்ததாக சரித்திரம் ஏது என்று கேட்டுச் சிரிக்கும்படியாக முடிந்து போனது இந்த விவகாரம்.
மாநிலங்களவையில் நிகழ்த்திய முதல் உரையே அண்ணாவை பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மிகப் பிரபலம் வாய்ந்த பிரமுகராக்கிவிட்டது. எல்லா மாநிலங்களையும் சேர்ந்த, எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்கள், மைய மண்டபத்தில் அண்ணா அமர்ந்திருக்கக் கண்டால் அவரைச் சூழ்ந்துகொள்வது வழக்கமாயிற்று.
அண்ணாவின் வாழ்க்கையில் 1962 இன்னொரு விதத்திலும் முக்கியத்துவம் பெற்றது. ராஜாஜியிடம் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அந்த ஆண்டுதான் அவருக்கு அளித்தது. ராஜாஜி தொடங்கிய சுதந்திரக் கட்சியுடன் தி.மு.க. தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளும் அளவுக்கு அண்ணாவை ராஜாஜியுடன் பிணைத்து வைத்தது, 1962.

பேரறிஞர் அண்ணா

குறுகிய கால அளவில் அண்ணா முதலமைச்சராக இருந்திருந்தாலும் அக்கால கட்டத்தில் ஆற்றிய மூன்று முத்தான சாதனைகளை எடுத்து கூறி விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
சென்னை பெரியார் திடலில் 31.8.2009 அன்று மாலை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற விவாதங்கள்’’ என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய ஆய்வுரையின் (1.11.2009) அன்றைய தொடர்ச்சி வருமாறு:
நீதிதேவன் மயக்கம்
இன்னொரு மிக முக்கியமான செய்தி இராவணன் இரக்கமென்ற ஒரு பொருளிலா அரக்கன் என்பது. அதையே மய்யப்படுத்தித்தான் நீதி தேவன் மயக்கம் என்ற நாடகத்தையே அண்ணா அவர்கள் எழுதி சிறப்பாகக் காட்டினார்கள்.
அந்த ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்திலே கம்பரை கூண்டிலே நிற்கவைத்து விட்டு இராவணனே குறுக்கு விசாரணை செய்வது போல ஏராளமான செய்திகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
நேருக்கு நேர் வாதம் செய்கின்ற பொழுது அது எப்படியிருக்கும்? வாதிடும் பொழுது ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டி இதற்கெல்லாம் இரக்கம் காட்டினார்களா? என்று கேள்வி கேட்கப்படும் சம்பூகனை வதம் செய்த நேரத்திலே இராமன் இரக்கம் காட்டினானா? சீதையை அவன் படுத்திய பாடு என்ன?
என்றெல்லாம் வரிசையாக இதில் ஏராளமான கருத்துகளை சுட்டிக்காட்டி அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
அண்ணா அவர்களுடைய கட்டுரைகள், விவாதங்கள் என்று வரும்பொழுது இந்த செய்தியை சொல்லலாம். சட்டமன்றங்கள், நாடாளுமன்ற விவாதங்கள் என்று பார்க்கும் பொழுது ரொம்ப அற்புதமாக இருக்கும்.
அண்ணா அவர்களின் மேலவை உரை
அண்ணா அவர்களுடைய ராஜ்ய சபை உரைகள் ஆங்கிலத்திலே உள்ளது. Anna Speech என்று வெளிவந்திருக்கிறது.
இதில் குறிப்பிடத் தகுந்த உரைகள் உண்டு. நாடாளுமன்றத்திலே வாஜ்பேயி போன்றவர்கள், பூபேஷ்குப்தா பேன்றவர்கள் இருக்கும் பொழுது அவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள்.
நாடாளுமன்றத்திலே அண்ணா அவர்கள் ஒரு முறை தெளிவாகச் சொன்னார்கள். ஏன் நீங்கள் இந்தியை ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டபொழுது, இந்த நேரத்தில் அண்ணா அவர்களின் வாதத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்.
மிகப்பெரும்பாலோர் இந்தி பேசுகிறார்கள். ஆகவே இந்திதான் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலே சொன்னவுடனே அண்ணா அவர்கள் அதற்கு பதில் சொன்னார்கள்.
தேசிய சின்னமாக எதை வைத்திருக்கிறீர்கள்?
நீங்கள் தேசிய சின்னமாக எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். குறைவான எண்ணிக்கையில் உள்ள மயிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
நிறைய இருக்கின்ற காகத்தை ஏன் தேசியச் சின்னமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொன்ன செய்தி உங்களிலே பலருக்குத் தெரியும்.
அடிக்கடி கூட்டங்களிலே பயன்படுத்தி பேசியிருக்கின்றார்கள். அதைவிட ராஜ்ய சபை பேச்சிலே அண்ணா அவர்கள் இன்னொரு கருத்தை நேருக்கு நேர் கேட்ட கேள்வியை மற்றவர்களாலே பதில் சொல்ல முடியவில்லை.
நீங்கள் சொல்லுகின்றீர்கள். இந்தி பெரும்பாலனவர்கள் பேசுகிறார்கள் என்று சொல்லுகின்றார்கள்.
இந்திய நாடு பல மாநிலங்களைக் கொண்ட நாடு. பல மொழிகளை, பல இனங்களைக் கொண்ட ஒரு நாடு. அப்படிப்பட்ட இந்த நாட்டிலே நீங்கள் ஆட்சி மொழிக்காக தேர்வு செய்திருக்கிற இந்தி மொழி இருக்கிறதே அந்த இந்தி மொழி என்பதிருக்கின்றதே அது 20 சதவிகிதம் பேர் பேசினால் கூட போதும்.
குறிப்பிட்ட பகுதியில்தான் பேசுகிறீர்கள்
கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே இப்படி பரவலாகப் பேசினால் அது ஆட்சி மொழியாவதற்குத் தகுதி உண்டு. ஆனால் இந்தி மொழி அப்படி இல்லையே அது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்தான் பேசப்படுகின்றது என்று அருமையாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
எனவே மத்திய பகுதியிலே இந்தி மாநிலங்களில்தான் இந்தி மொழி பேசப்படுகிறது. ஒரு இனத்தினுடைய ஆதிக்கம், இன்னொரு இனத்தின் மீது வரக்கூடாது. அது நியாயமாகாது. தவறான முறையில் நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. சரியான முறையில்தான் நாங்கள் அச்சம் கொண்டிருக்கிறோம் என்று அண்ணா அவர்கள் சொன்னபொழுது மற்றவர்களால் இந்தக் கருத்தை மறுக்க முடியவில்லை.
அண்ணாவின் ஆங்கில நடை
இன்னொரு சிறப்பு இருக்கிறது. நேரத்தைக் கருதி விரிவாகச் சொல்ல இயலவில்லை. ஆங்கிலம் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அண்ணா அவர்களுடைய ஆங்கில நடைக்காகவே திரும்பத் திரும்ப அண்ணா அவர்களுடைய உரையைப் படிக்க வேண்டும். அவ்வளவு அற்புதமான சொல்லாட்சிகள் அண்ணா அவர்கள் சரளமாக அதைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
கேள்வி கேட்டவருக்கு உடனே அண்ணா பதில் சொல்லுகின்றார். நீங்கள் இருக்கின்ற பகுதியும் இந்தியை ஏற்காத பகுதிதான் என்று அண்ணா சொன்னார். அவர் வங்காளத்திலே இருந்து வந்தவர்.
அது மட்டுமல்ல இந்திக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை அரசே ஒப்புக்கொள்ளவில்லையே.
இரண்டு பாட்டிலும் இந்தி இல்லை
இரண்டே இரண்டு பாட்டைத்தானே இந்த அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது. அண்ணா பேசியிருக்கிறார்.
அண்ணா அவர்களின் வாதத்திறமையைப் பாராளுமன்றத்திலே காணலாம்.
அண்ணா சொல்கிறார். அந்த இரண்டு பாடல்களில் ஒன்று ‘ஜனகணமன’ மற்றொன்று ‘வந்தே மாதரம்’ இந்த இரண்டுமே இந்தி அல்ல.
இந்திக்கு செல்வாக்கு இல்லை
இதிலிருந்தே இந்திக்கு எந்தவித செல்வாக்கும் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று மிக அழகாக மொழி பிரச்சினையிலே ஆழமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
எனவே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அண்ணா அவர்களுடைய உரையைக் கேட்பவர்களே ஏற்கக் கூடிய அளவிற்கு வரக்கூடிய நிலைகள் இருந்தன.
உங்களுக்குத் தெரியும். அண்ணா அவர்கள் சட்டமன்றத்திலே பேசும்பொழுது எதிர்கட்சித் துணைத் தலைவராக இருந்த விநாயகம் அவர்கள் ரொம்ப வேகமாக அண்ணா அவர்களைப் பார்த்து பேசினார்.
‘Your days are Numbered’ என்று சொன்னார். அது ஒரு ஆங்கில சொற்றொடராக இருந்தாலும் கூட, அப்படிச் சொன்னார். அண்ணா அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்த காலத்திலே உங்களுடைய நாள்கள் எண்ணப்படுகின்றன என்று சொன்னார்.
இன்றும் விநாயகம் குரல்கள் ஒலிப்பதா?
இன்னமும் கூட இந்த ஆட்சியைப் பற்றி (கலைஞர் ஆட்சியைப் பற்றி) விநாயகம் அவர்களுடைய கருத்துகள் வேறு குரலில் ஒலிக்கின்றன.
அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்லக் கூடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
ஆனால் அண்ணா அவர்கள், மற்றவர்கள் பதற்றப்பட்ட நேரத்திலே அவர்கள் பொறுமையாகப் பதில் சொன்னார்.
‘My steps are measured ’ என்று அண்ணா அவர்கள் மிக அழகாக பதில் சொன்னார்.
என்னுடைய அடிகளை அளந்து வைக்கிறேன்
நான் என்னுடைய அடிகளை அளந்து வைக்கிறேன் என்று சொன்னார். அதனால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
முப்பெரும் சாதனைகள்
அண்ணா அவர்களுடைய ஆட்சி வந்து விட்டதே என்று சங்கடப்பட்டார்கள். அண்ணா அவர்கள் சட்டமன்றத்திலே பேசும்பொழுது சொன்னார். ஆட்சி மொழி இரு மொழித்திட்டம், சென்னை ராஜதானி என்றிருந்த, தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் ஆகிய மூன்று காரியங்களை செய்திருக்கின்றோம்.
எங்களுடைய ஆட்சி செய்திருக்கிறது. இது சாதாரணமல்ல. முப்பெரும் சாதனைகள் ஒரு வேளை எங்களது ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். டெல்லியை மனதிலே வைத்துக்கொண்டு அண்ணா சொன்னார்.
மாற்றிவிட நினைப்பீர்கள்
உங்களால் முடியுமா என்றால் உங்களால் முடியும். இன்றைய அரசியல் சட்டம், அதிகாரம் இவைகளை வைத்து முடியாது என்று நான் சவால்விடமாட்டேன். உங்களால் முடியும். ஆனால் எங்களை அனுப்பிவிட்டு வேறு ஒருவர் உட்காருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அண்ணா ஆட்சிக்கு வந்தல்லவா இவைகளை எல்லாம் செய்துவிட்டார். எனவே இதை மாற்றிவிட வேண்டும் என்று நினைப்பு வந்தால் உடனே இதை மாற்றினால் மக்கள் நம்மை சும்மா விடுவார்களா? என்ற அச்சம் உங்களைப் பிடித்து உலுக்கும், ஆட்டும்.
அச்சம் எவ்வளவு காலத்திற்கு உலுக்குகிறதோ
அந்த அச்சம் எவ்வளவு காலத்திற்கு உங்களுக்கு இருக்கிறதோ, வருகிறவர்களுக்கு இருக்கிறதோ அவ்வளவு காலத்திற்கும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள் என்ற அற்புதமான ஒரு தத்துவத்தை அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்படிப்பட்ட அண்ணா அவர்களுடைய கருத்தோவியங்கள், எழுத்தோவியங்கள் என்றும் நிலைத்து நிற்பவை மக்கள் மனதிலே என்றும் அழியாது. என்று கூறி எனது உரையை நிறைவுசெய்கிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தலைவர்கள் கமெண்ட் ! கடி + அதிரடி

காமராஜரின் கமெண்ட்!கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார்.உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!________________________________________
ராம கிருட்டிண பரமஹம்சர், ஒருமுறை நரேந்திரனை (விவேகானந்தர்) அழைத்து, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார்.நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார்.உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்Aug 30 (2 days ago)அரசர்இரண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்கலைவாணர் என். எஸ். கிருஷ்ணம் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட் டில் வெளிக் கதவு சாத்தியிருந் தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும். வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.வாசலில் நின்று பார்த்த என். எஸ்.கிருஷ்ணன் வழிமறித்து, "இங்கே வாடா, தம்பீ...' என்று அழைத்ததும், மிகவும் சாதுவாக அவர் முன் வந்து நின்றான் பையன். "தம்பி, பையில் என்ன இருக்கு?' என்று கேட்டார். "ஒண்ணுமில்லையே!' என் றான்."காட்டு, பார்க்கலாம்!' என்று அவன் சட்டைப் பையில் கை விட்டார். பூட்டு! கையும், களவுமாக பிடிபட்டவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்."ஏண்டா, எடுத்தே?' என்றார். "பசி, பழைய சாமான் கடையில் போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்ன்னு எடுத்தேன்!' என்று உள்ளதைச் சொன்னான்.அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு இல்லாததைப் பார்த்து விட்டார். தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன் பையனுடன் பேசிக் கொண் டிருப்பதைப் பார்த்தார். அவன் தான் எடுத்திருப்பான், என். எஸ்.கே., பிடித்துக் கொண்டார் என்ற எண்ணத்தில் ஆத்திரத் தோடு வந்தார், பூட்டைப் பறி கொடுத்த வீட்டுக்காரர்.என்.எஸ்.கே.,யை கெஞ்சும் தோரணையில் பார்த்தான் பையன். எதிர் வீட்டுக்காரர் வந்ததும், என்.எஸ்.கே., சிரித்தபடி, "வாங்க... வாங்க... பூட்டைத் தேடறீங் களா? ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான். தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு வந்தான். நான் வாங்கி வைச்சிருக்கேன். "இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான். அதுக் காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்...' என்றவர், பையனிடம், "டேய், தம்பி கொடுப் பாரு; போயி வாங்கிட்டுப் போ!' என்றார்.பாவம்! அவனுக்கு பசி நீங்க இரண்டு ரூபாய்க்கு வழி பிறந்தது.Aug 30 (2 days ago)அரசர்அறிவுள்ள தலைவர்கள்.. அந்தக்காலத்தில்..!சுதந்திரப் போராட்ட காலம்! புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வர இருந்தார் ஜவஹர்லால் நேரு. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரித்த சமஸ்தானம், 'நேருவின் கார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையக் கூடாது!' என்று தடை விதித்தது. குறிப்பிட்ட நாளில் புதுக்கோட்டை எல்லையை நெருங்கினார் நேரு. அவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.சமஸ்தான அதிகாரி ஒருவர் காரின் அருகில் வந்து, தடை உத்தரவுக்கான கடிதத்தை நேருவிடம் காட்டினார். அப்போது, நேருவுடன் சத்தியமூர்த்தியும் இருந்தார். அவர் நேருவின் காதில் ஏதோ முணுமுணுத்தார்!அடுத்த நிமிடம்... இருவரும் காரில் இருந்து இறங்கி, ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர். பதறிப்போன அதிகாரி ஓடி வந்து அவர்களை மறித்தார். உடனே சத்தியமூர்த்தி, "நேருவின் கார் சமஸ்தான எல்லைக்குள் வரக் கூடாது என்பதுதானே உங்கள் உத்தரவு? தடை காருக்குத்தானே தவிர, நேருவுக்கு அல்ல!'' என்றார். வேறு வழியின்றி அதிகாரிகள் பின்வாங்கினர்.சத்தியமூர்த்தியின் சமயோஜிதத்தை பாராட்டிய நேரு, பிறகு புதுக்கோட்டை மக்களை சந்தித்து விட்டுத்தான் டெல்லி திரும்பினார்!_____________________________________பூட்ஸூக்கு பாலீஷ் போட்ட லிங்கன்!ஒரு முறை ஆப்ரகாம் லிங்கன் தனது பூட்ஸூக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நண்பர் ஒருவர் லிங்கனை மட்டம் தட்டும் விதமாக, ஏளனத்துடன், ‘‘என்னங்க, உங்க பூட்ஸூக்கு நீங்களே பாலீஷ் போடுறீங்க?’’ என்று கேட்டார். உடனே ஆபிரகாம் லிங்கன் அந்த நண்பரிடம், ‘‘நீங்க, இன்னொருவர் பூட்ஸூக்குத்தான் பாலீஷ் போடுவீர்களா?’’ எனத் திருப்பிக் கேட்டார்.பதில் ஏதும் சொல்ல முடியாத நண்பர் வெட்கித் தலை குனிந்தார்.______________________________________
தண்டனைக்கு உரியவன் தந்தையே!கிரேக்கத் தத்துவ ஞானியான டயோஜனஸ், ஒரு வீதியின் வழியே நடந்து கொண்டி ருந்தார். வழியில், சிறுவன் ஒருவனை பலரும் சேர்ந்து அடித்துக் கொண்டிருப் பதைக் கண்டார். அவர்களை விலக்கி விட்டவர், சிறுவனை அடிப்பதற்கானகாரணத்தைக் கேட்டார்.அவர்கள், "கேட்கச் சகிக்காத வார்த்தைகளால்... அசிங்கமாக பேசியதால் இவனை அடிக்கிறோம்!'' என்றனர். உடனே, "அதற்காக இந்தச் சிறுவனை அடிக்காதீர்கள். இவனின் தந்தை யார் என்பதை அறிந்து, அவனைப் பிடித்து அடியுங்கள். மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தராத தந்தையே தண்டனைக்கு உரியவன்'' என்றார் டயோஜனஸ்!Aug 30 (2 days ago)அரசர்அண்ணா சொன்னார்!அறிஞர் அண்னா ஒரு அமெரிக்கப் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் ஒன்று:கேள்வி: உங்கள் நாட்டிற்கு ஜனநாயகம் புதிதாகையால் எப்படி ஜனநாயகம் நிலைக்கப் போகிறது என்ற பயம் இருக்கிறதா?பதில்: "ஜனநாயகம் எங்களுக்குப் புதிதல்ல. 2000 ஆண்டுகட்கு முன்பே பனையோலையில் நாங்கள் விரும்புவோரின் பெயரை எழுதி ஒரு மண் பானையில் போட்டு (குடவோலை முறை) ஊர் நாட்டாண்மைக் காரர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆகவே நீங்கள் நினைப்பது போல் எங்களுக்கு ஜனநாயகம் புதிதல்ல"_____________________________________
தமிழில் தானே திட்டுகிறான்கண்ணதாசனும் , அறிஞர் அண்ணாதுரையும் 60 களில் , (கண்ணதாசன் தி.மு.க. வில் இருந்த போது) நெருங்கி பழகி வந்தனர் ! அவர்கள் உறவு அண்ணன் - தம்பி உறவுபோல் இருந்தது. அனேக மேடைகளில் ஒன்று சேர காணப்பட்டனர் ! பின்னர் வந்தது பிளவு !கணணதாசன் தி.மு.க . வை விட்டுப் பிரிந்தாரா அல்லது அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை ! எனினும் கண்ணதாசன் மனதில் அண்னா செய்த செயல்கள் அவரது மனதைப் பாதித்தன ! எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ! வேளை வந்தது !சிவாஜி நடித்த " படித்தால் மட்டும் போதுமா ? " என்ற படத்தில் ஒரு பாடல் :" என்ன " சிச்சுவேஷன் " ? --- கண்ணதாசன்.' அண்ணே, அண்ணன் ( கே.பாலாஜி ) , தம்பிக்கு ( சிவாஜி ) ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான் ! ஆனால் நடந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத நிலைமை தம்பிக்கு ! இது தான் " சிச்சுவேஷன் " " ---- எம்.எஸ். விஸ்வநாதன்.கண்னதாசனுக்கு கேட்கவா வேண்டும் ! மனதில் இருந்த காயததை ஆற்ற இதை விட வேறு சந்தர்ப்பம் ஒரு கவிஞனுக்கு வேண்டுமோ ? எழுதினார் !"அண்ணன் காட்டிய வழியம்மா - இதுஅன்பால் விளைந்த பழி அம்மா !கண்ணை இமையே பிரித்ததம்மா - என்கையே என்னை அடித்தம்மா ! "என்று பேனா வை வைத்து அண்ணாவை அடித்தார் ! அது மட்டுமா," அவனை நினைத்தே நான் இருந்தேன் - அவன்தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் - இன்னும்அவனை மறக்கவில்லை - அவன்இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை "என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தார் !Aug 30 (2 days ago)அரசர்இந்த பாடல் படத்திற்கும் பொருந்தியது என்று சொல்லவும் வேண்டுமோ !இந்த பாடலைப் பற்றி தி.மு.க வினர் சிலர் அண்ணாவிடம்" போட்டுக் " கொடுத்து இருவர் பகையில் குளிர் காய்க்க கணக்கு போட்டனர் ! அதற்கு அண்ணா சொன்ன பதில் ! :" போகட்டும் விடுங்கய்யா ! என்னை அவன் நல்ல தமிழில் தானே திட்டுகிறான் , திட்டி விட்டுப் போகிறான் ! விட்டு விடுங்கள் !_________________________________________
நோபல் பரிசுஆல்பிரட் நோபல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரது உதவியாளராயிருந்த அவரது சகோதரரான ஆஸ்கர் அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிர் துறந்தார்.இந்த சம்பவம் நோபல் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது, இருப்பினும் மனம் தளராமல் முழுமுச்சுடன் தமது ஆராய்ச்சியில் ஈடுபட்டு டைனமைட்'டை உருவாக்கினார்.தன் கண்டுபிடிப்பான வெடிமருந்து உலக அழிவிற்குப் பயன்படுகிறதென்ற கவலை மனதை உறுத்த அதன்காரனமாக நோய்வாய்பட்டு படுக்கையில் விழுந்தார். தனது கண்டுபிடிப்புகள் ஆக்க வேலையைவிட மனித உயிரை குடிக்கவே பெரிதும் பயன்படுத்தப்பட்டது கண்டு நொந்த அவர் தமது 4 கோடியே 60 லட்சம் மதிப்புடைய சொத்துகளில் 3 கோடியை சமாதானத்திற்காகப் பாடுபடும் மேதைகளுக்கு வழங்கி ஊக்கமளிக்கும் விதமாக நோபல் பரிசு என்ற ஓன்றை அமைத்தார்._________________________________________
_பத்து வயதிலேயே பாடல்கள்...புகழ்பெற்ற சங்கீதமேதை மொஸார்ட்டை சந்தித்த வாலிபன் ஒருவன், ''ஐயா, சிறந்த பாடல்களை இயற்றுவது எப்படி?'' என்று கேட்டான்.''நீ வயதில் இளையவன். முதலில் எளிய பாடல்களை இயற்றிப் பார்'' என்றார் மொஸார்ட்.''நீங்கள் மட்டும் 10 வயதிலேயே சிறந்த பாடல்களை இயற்றவில்லையா?'' என்று கேட்டான் வாலிபன்.அதற்கு மொஸார்ட், ''அது சரி. ஆனால், எப்படி பாடல்களை இயற்றுவது என்று நான் எவரையும் கேட்டுக் கொண்டிருக்கவில்லையே!'' என்று புன்னகையுடன் பதில் தந்தாராம்!Aug 30 (2 days ago)அரசர்ஆறுதலை முருகன் எப்படி ஒருபக்கமா படுப்பான்?திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று..திருமணம் ஒன்றில் தலைமை தாங்க வாரியார் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலை அவிழ்த்தார்.சாமி.. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒருபக்கமா படுப்பாரு.?கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டு பிசியாக இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார்,“நேத்து தூங்கினீங்களா?”அவர்கள் இருவரும் "இன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.நடிகவேள் அவர்களை பார்த்து வரியார் சொன்னார்...ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்சே இவங்களுக்கு தூக்கம் வரலையே... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு தூக்கம் எப்படி வ்ரும் ? தூங்கறதுக்கு நேரம் ஏது?_____________________________________''இவர் என் உயிரைக் காப்பாற்றியவர்''ஒருமுறை சுவாமி அகண்டானந்தாவுடன் இமய மலை அடிவாரத்தில் நடந்து கொண்டி ருந்தார் விவேகானந்தர். வெகு தூரம் நடந்த களைப்பு அவரை வாட்டியது. கடும் பசி வேறு! சாலையோரத்தில், இடுகாட்டுக்கு அருகில் விழுந்து விட்டார்!அந்த இடுகாட்டின் பொறுப்பாளராக இருந்தவர் சுல்பிகர் அலி. இவர், சுவாமிஜி விழுந்ததைக் கண்டு ஓடி வந்தார். தன்னிடம் இருந்த வெள்ளரிப்பழத்தை விவேகானந்த ரிடம் தந்தார்.''நீங்களே ஊட்டி விடுங் கள்'' என்றார் சுவாமி விவேகானந்தர். சுல்பிகர் அலி முதலில் தயங்கினார். பிறகு சுவாமியின் நிலை கருதி வெள்ளரிப்பழத்தை ஊட்டி விட்டார். ஓரளவு தெம்பு வந்ததும், சுவாமிஜி, ''ஊட்டி விடுங்கள் என்றதும் ஏன் தயங்கினீர்கள்?'' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்.''நீங்கள் ஓர் இந்து சந்நியாசி, நானோ...'' என்று இழுத்தார் சுல்பிகர் அலி. உடனே, ''அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்'' என்ற சுவாமிஜி, நன்றி கூறி விடைபெற்றார்!Aug 30 (2 days ago)அரசர்சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்கா சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. ஊர்வலத்தில் வந்த சுவாமிஜி, கூட்டத்தின் நடுவே நின்றிருந்த சுல்பிகர் அலியை அடையாளம் கண்டு கொண்டார். அவரை அருகில் அழைத்து, ''இவர் என் உயிரைக் காப்பாற்றியவர்'' என்று அருகில் இருந்தவர்களிடம் கூறி, சுல்பிகர் அலியை பெருமைப்படுத்தினார்._________________________________________காத்திருந்த காந்திஜி!சபர்மதி ஆஸ்ரமத்தில், உணவு உண்ணுவதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மணி ஒலிப்பது வழக்கம். குறிப்பாக இரண்டு முறை மணி அடிக்கப்படுமாம். அதற்குள், உணவுக் கூடத்துக்கு வந்துவிட வேண்டும். தாமதமாக வருபவர்கள், உணவுக் கூடத்தின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்க வேண்டும்!ஒரு நாள், இரண்டாவது முறை மணியடித்து சிறிது நேரம் கழித்த பிறகே வந்து சேர்ந்தார் காந்திஜி. எனவே, கதவருகே காத்திருந்தார். இதை கவனித்த சேவகர் ஒருவர் ஓடி வந்து, ''பாபுஜி, தயவுசெய்து உள்ளே வாருங்கள்!'' என்றார்.ஆனால், இதை ஏற்க மறுத்தார் காந்திஜி.''ஆஸ்ரமத்தின் விதிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரையும் போல நானும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால், நாளை மற்றவர்களுக்காகவும் அப்படியே தளர்த்த வேண்டியிருக்கும்!'' என்றவர், பொறுமையுடன் காத்திருந்தார்._______________________________________
'சொர்க்கம் செல்ல ஆசை இல்லை!'ஆங்கிலக் கவிஞர் ஜான்மில்டனின் 'மீண்ட சொர்க்கம்' எனும் கவிதை குறித்து விளக்கி, பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். வகுப்பில் இருந்த மாணவர்களில் பெர்னாட்ஷாவும் ஒருவர்.திடீரென... ''உங்களில் எத்தனை பேருக்கு சொர்க்கம் செல்ல ஆசை?'' என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர். பெர்னாட்ஷாவை தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றனர். ஆசிரியருக்கு ஆச்சரியம்!பெர்னாட்ஷாவின் அருகே வந்தவர், ''உனக்கு சொர்க்கம் செல்ல ஆசை இல்லையா?'' என்று கேட்டார். இதற்கு பதிலளித்த பெர்னாட்ஷா, ''எனக்கும் சொர்க்கம் செல்ல ஆசைதான். ஆனால் எல்லோரும் சொர்க்கத்துக்குச் சென்றால்... அந்த சொர்க்கம் சொர்க்கமாகவா இருக்கும்?'' என்றார்.குறும்புத்தனமும் சாதுரியமும் நிறைந்த பெர்னாட்ஷாவின் இந்த பதிலைக் கேட்டு, ஆசிரியர் உட்பட அனைவரும் சிரித்தனராம்.

பேச்சுதிறமை

பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.
வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.
விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.
விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு.
‘நாநலம் என்னும் நலனுடைமை’ என்பார் திருவள்ளுவர். நாவன்மையை நானிலம் போற்றும். நலனுடைமை என்று கூறுவதன் பொருள், நாநலம் ஒரு நல்ல உடைமை. அதாவது, நல்ல சொத்து. ஆகவே, கவனமாகக் காப்பாற்ற வேண்டும்.
ஒரு பட்டிமன்றத்தில் பேசச் சென்றிருந்தோம். அந்த மன்றத்தின் செயலாளர் வரவேற்புரையாற்றினார். பட்டிமன்றப் பொருள் பற்றி விஸ்தாரமாகப் பேசினார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் யாவரும் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர். இடையிடையே ‘இதையெல்லாம் நான் பேசக்கூடாது’ என்று வேறு சொல்லிக் கொண்டே பேசுகிறார். இதைப்பற்றியெல்லாம் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேசவேண்டும் என்று கட்டளை வேறு போடுகிறார். சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.
மேடைப் பேச்சாளர்கள் எதைப் பேச வேண்டும் என்று தொகுப்பதைவிட, எதைப் பேசக் கூடாது என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். அப்போதுதான் பேச்சுக்கு வரவேற்பு கிடைக்கும்.
வரவேற்புரை சொல்லு பவர் வந்தவர்களை வரவேற்பதோடு
நிறுத்திக் கொள்ளுவதுதான் முறையாகும். அதற்குமேல் பேசி னால், அது அதிகப்பிரசங்கித் தனமே தவிர வேறல்ல.
நன்றியுரை ஆற்ற வந்தவர், நன்றி சொல்லி முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி, சொற்பொழிவாற்றிய வர்களின் பேச்சை திறனாய்வு செய்தும், பேசியவர் மனம் நோகவும் பேசுவது முறையா காது. நன்றியுரை என்பது, பேசிய வரை மனங்குளிரச் செய்வதாக அமைய வேண்டும்.
துணைப் பேச்சாளர் சுருக்க மாகப் பேசுவதே நல்லது. முக்கிய மான பேச்சாளரின் நேரத்தையும் துணைப் பேச்சாளர் எடுத்துக் கொண்டு பேசிவிட்டால், முக்கியப் பேச்சாளர் யார் நேரத்தை எடுப்பது?
குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவு பெறாத கூட்டம், கேட்க வந்தவர்களுக்கு அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்கும். ‘இனி, இவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு வருவதில்லை’ என்ற முடிவோடு வீடு செல்வார்கள். இது தேவை தானா?
ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பேசுபவர்கள், அந்தத் தலைப்பில் மட்டும் செய்தி களைத் தரவேண்டும். தலைப்பை விடுத்து வேறு விஷயங்களைப் பேசினால், மக்கள் வெறுப் படைவார்கள்.
கூட்டத்துக்கு ஏற்பாடு செய் பவர்களும் தலைப்புக்கேற்ற சொற்பொழிவாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நகைச் சுவை மன்றத்தில் பேசுமாறு நகைச்சுவை உணர்வு இல்லாத வரை அழைத்தால், அவர் என்ன செய்வார்? பாவம். ஆழ்ந்த கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பேசுவார். நகைச்சுவையை எதிர் பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். அவரை அழைத்தது தவறு என்றால், பேசவந்தது இவர் செய்யும் மிகப்பெருந்தவறு.
கூட்டம் கேட்க வந்த சுவைஞர் களின் உள்ளத்தைப் புண்படுத் தாதவாறு பேச வேண்டும். அது தான் மேடை நாகரிகம்.
ஒருமுறை பெர்னாட்ஷா லண்டனில் பேசும் போது, வந்திருந்தவர்கள் சுவைத்துக் கேட்காததை உணர்ந்து, ‘கேட்க வந்தவர்களில் பாதிப்பேர் முட்டாள் கள்’ என்றார். கூட்டம் ஆவேசத்துடன் அவர் பேச்சை எதிர்த்து மன்னிப்புக் கேட்குமாறு முழக்கமிட்டது.
பெர்னாட்ஷாவோ அமைதி யாக, ‘வந்திருப்போரில் பாதிப் பேர் அறிவாளிகள்’ என்று கூறி னார். கூட்டம் அமைதியடைந்து ‘அப்படிச் சொல்லுங்கள்’ என்றது. முதலில் சொன்ன தற்கும் மறுபடி சொன்னதற்கும் வித்தி யாசமில்லை. எனினும் பேச்சு முறையில் நயம் இருந்ததால் தப்பித்தார்.
மேடையேறிப் பேசுவது தான் பேச்சு என்பதில்லை. மற்றவர் களுடன் உரையாடுவதும் ஒரு கலையே ஆகும்.
உரையாடுவதில்தான் எத்தனை வகைகள்? நம் மன நிலை தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்? இன்று நல்ல ஓய்வு; யாராவது வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து தயாராயிருக்கும் போது ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக்கொண்டு ‘இதோ வருகிறேன்’ என்று போய் விடுவோர் எத்தனை பேர்?
உடல்நிலை சரியில்லாமல் எப்போதோ இருந்ததை விசாரிக்க வந்ததாகக் கூறிக்கொண்டு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்துவிட்டு, ‘அப்படியே ஒரு 50 ரூபாய் இருந்தால் வாங்கிட்டு போகலாம்னு நினைச்சேன்’ என்பவர்கள் எத்தனை பேர்? உடல் நலம் கேட்கவா வந்தார்? இல்லை, கடன் வாங்கத்தான் வந்தார். உடல்நலம் விசாரிக்க வந்ததாக பொய் கூறுகிறார். அவரிடமும் பேசிக் கொண்டிருக் கத்தான் வேண்டியிருக்கிறது!
ஏதோ ஒரு விஷயத்தை நம்மிடம் தெரிந்துகொள்ள வந்தது போல் பாவனை! ஆனால் அவருக்குத் தெரிந்த ஒன்றை நம்மிடம் சொல்ல வந்ததே உண்மை!
சிலப்பதிகாரத்திலே பாண்டி யன் “ஏன் சார், கோவலனைக் கொன்றான்?” என்று கேட்டு அவசரமாகப் போகும் நம்மை வழியில் நிறுத்துவார். நாமும் நம் வேலையை விட்டு, அவருக்கு விளக்கம் கூற முற்பட்டு ‘‘கோவலன் மனைவி பேரு கண்ணகிங்க. அவன் அவளை அழைச்சிட்டு மதுரைக்கு வாணி கம் செய்ய வந்தாங்க’’ என்று ஆதியோடு அந்தமாகச் சிலப்பதி காரம் சொல்ல முற்படும் வேளையில்,
‘கொஞ்சம் இருங்க’ என்று நம்மை நிறுத்திவிட்டு, தான் மதுரைக்குப் போனவாரம் சென்றிருந்ததாகவும், அங்கு ஒரு மேடான பகுதியைப் பார்த்த தாகவும், விஷயந்தெரிந்தவர் களை விசாரித்ததாகவும், அங்கு தான் கோவலன் கொலை செய்யப்பட்டதாகவும், மன்னனே நேரில் வந்து அரிவாளால் வெட்டியதாகவும், நீதி தவறி மன்னன் வெட்டியதால் கோவ லன் புதைக்கப்பட்ட மேடு கரை யாமல் இன்றுவரை அப்படியே இருப்பதாகவும் எத்தனையோ
முறை எத்தனையோ பேர் கரைத்தும் மேடு கரையவில்லை என்றும், இந்த அதிசயத்தை வெளிநாட்டுக்காரர்கள் வந்து பார்த்துச் செல்வதாகவும், தான் அதைப்பார்த்து அதிசயித்து நின்றதாகவும் கூறுவார்.
அதோடு நிறுத்தமாட்டார். ‘நீங்கள் மதுரை போனதே இல்லையா? மேட்டைப் பார்க் கவே இல்லையா? அந்த மேட்டைக் கூடப் பார்க்காமல் மதுரை போய் வந்தால் என்ன பிரயோசனம் என்றும் வேறு கேட்டு நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துவார்.
இவர் நம்மிடமிருந்து சிலப்ப திகாரம் தெரிந்து கொள்ள வர வில்லை. தான் அறிந்து வைத்தி ருக்கும் ஒரு கட்டுக் கதையை நம் தலையில் கட்டப் பார்க்கிறார். அவர் நேரமும் பாழ், நம் நேரமும் வீண். வீண் கதை கேட்டதே மிச்சம்.
பொதுவான இடங்களில் நம் நாவுக்கு வேலை தராமல் காதைத் தீட்டிவைத்துக் கொண்டு அனுப வக் கொள்முதல் செய்வதுதான் அறிவுடைமை.
பேருந்துப் பயணம், ரயில் பயணம், நடைப்பயணம் ஆகிய பொழுதுகளில் நாவுக்கு வேலை தராமல் இருப்பது சாலச் சிறந்தது. வீண் விவாதங்கள் முட்டாளிடம் பேசி அதிமுட்டாளாதல் போன்ற அசிங்கங்களில் அகப்பட்டுக் கொள்ளும் அபாயம் நேரும்.
காதைத் திறந்துகொண்டு – அதாவது காதில் வாங்காமல் இருந்துவிடாமல் – கேள்வி ஞானம் பெறலாம்.
சங்கீதம் சொல்லித்தரும் சங்கீத வித்வான்களிடம் ஒரு பழக்கம் உண்டு. சிஷ்யனுக்கு அரங்கேற்ற அளவிற்குச் சொல்லிதந்த பிறகு அவனுக்கு விடைதரும் நேரத்தில், “அப்பா, எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் குடுத்துவிட்டேன். இனி உன் கேள்வி ஞானத்தால் சங்கீதத்தை விருத்தி செய்துகொள்” என்று கூறி அனுப்பி வைப்பார்.
“கேள்வி ஞானம்” என்பது அவ்வளவு முக்கியமானது. கேட்டுக்கேட்டே சிறந்த ஞானம் பெற்றவர்கள் உண்டு. உதாரணத் துக்குச் சில சொல்வேன்.
ஒரு இளைஞன் நன்றாகக் குடித்துவிட்டு, பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தான். தாறு மாறாகப் பேசுகிறான். பக்கத்தில் அமர்ந்திருப்போரிடமெல்லாம் தகராறு செய்கிறான். மூன்றுபேர் அமரும் இருக்கையில் அவன ருகே அமர்ந்து ஒவ்வொருவராக, அவன் தொல்லை பொறுக்க முடியாது எழுந்து சென்று விடுகின்றனர். மூவர் இருக்கையில் இப்போது அவன் மட்டும்.
பேருந்தில் நிறையப்பேர் அமர இடமின்றி நின்று வருகின்றனர். எனினும் அவன ருகில் அமர எவரும் விரும்ப வில்லை. நின்றாலும் பரவா யில்லை, அவன் அருகில் மட்டும் அமரக்கூடாது என்ற உறுதியில் எல்லோரும் உள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கிழவி (60 வயதுக்குமேல்) “என்னப்பா இப்படி பயப்படுறீங்க? என்னமோ கொஞ்சம் குடிச்சிட்டான் அவ் வளவுதானே! நம்ம புள்ளயா இருந்தா இப்படி ஒதுக்கு வோமா?” என்று கூறிக் கொண்டே அவனருகில் சென்று உட்கார்ந்தார்.
சற்று நேரம் அந்தக் கிழவியைப் பார்த்துக் கொண்டே இருந்த குடிகாரன் மெதுவாக அந்த அம்மையாரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “ஏ கிழவி! இப்பவே நீ இவ்வளவு அழகா இருக்கியே? உன் வயசுல நீ என்னமா இருந்திருப்பே? பயலுவ உன்னைச் சுத்தி சுத்தி வந்திருப் பானுங்களே?” என்று பின் னோக்கி பார்வையைச் செலுத்தத் தொடங்கினான்.
“போடா நாயே! பொறுக்கி! நீ நாசமாப் போவே” என்று திட்டிச் சாபம் கொடுத்துவிட்டு எழுந்து நின்று கொண்டார். வெகுதூரம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மலத்தை மிதித்து விட்ட சகியாமை முகத்தில் தோன்ற கூச்சத்தோடு நின்றபடி பயணம் செய்தார்.
இதைக் கண்டும் கேட்டும் நான் உணர்ந்த ஒன்று உண்டு. குடிகாரனிடம் பேச்சுக் கொடுத் தால் மானம் பறிபோகும்.
திருக்குறளில்,
களித்தானைக் காரணங் காட்டல் தூநீர்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
என்று சொல்லப்பட்டிருப் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். குடிகாரனுக்கு அறிவுரை சொல்லித் திருத்த நினைக்காதே. மெழுகுவர்த்தி கொண்டு நீருக்குள் தொலைந்த பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? என்று வள்ளுவர் சொல் வதற்கு பேருந்தில் ஓர் எடுத்துக் காட்டாக அல்லவா அந்தச் சம்பவம் அமைந்தது!
பேருந்து ஓட்டுநர் ஓர் அம்மையாரிடம் “அந்த ஊரிலே எல்லாம் இந்த பஸ் நிக்காதும்மா” என்றபோது அந்த அம்மையார், “நீ பிரேக்கைப் போடுய்யா, நிக்குதா? இல்லையான்னு பார்ப் போம்,” என்றதும் ஓட்டுநர் முகத்தில் விளக்கெண்ணெய்!
நான் ஏதாவது அந்தப் பெண் மணியிடம் பேசியிருந்தால் எனக்கும் அதே விளக்கெண் ணெய்தானே? இதனால்தான், பொது இடங்களில் வாயைத் திறக்காமல் செவி சாய்க்க வேண்டும் என்பது!