Wednesday, October 6, 2010

அவளுக்காக

அவளிடம் ஒரு வேண்டுகோள்
உனது தோழிகள் யாராவது என்னை யாரென்று கேட்டால் தயவு செய்து உன் நண்பன் என்று சொல்லிவிடாதே இவன் என்னை ஒருதலையாக காதலிக்கிறான் என்று சொல்லேன் அப்படியாவது என் காதலுக்கு அங்கீகாரம் கிடைக்குமல்லவா
உனக்கு தானே என்னைக்காதலிக்க பிடிக்கவில்லை
நான் உன்னைக் காதளிப்பதுமா பிடிக்கவில்லை .
நீ கோபத்தில் வார்த்தைகளை அம்பாக எய்த போது கூட வலிக்கவில்ல என் மனதிற்கு , இப்போது நீ என்னை அன்பாக நண்பன் என்று கூறும்போது வலிக்கிறது .



அப்படி அழைபதுதான் உனக்கு பிடிக்குமென்றால் அந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்கிறேன் உன்னைகாதளித்த தவறுக்காக .

நான் இந்த உலகில் அதிக சந்தோஷமாக இருந்த நாட்கள் ,வருத்தமாக இருந்த நாட்கள் எதை நினைத்துப்பார்த்தாலும் முதலில் நினைவுக்கு வருபவளே .
இருபது ஆண்டுகளில் பெரும் அனுபவத்தை இரண்டாண்டில் தந்தவளே . வாழ்கை என்ற உலக கோப்பையில் நான் காதல் என்ற அணியிடம் தோற்றிருக்கலாம் அனாலும் ஆட்ட நாயகன் விருது நிச்சயம் எனக்கு தான் உன்னைக் காதலித்ததால் .

அனைவரையும் கவரும் காந்தக் கண்கள் ,
அவள் சிரிக்கும் போது முன் வரிசைப் பற்களை பார்த்தால் பொறியியலுக்கான நோபல் பரிசை தர தோன்றும் படைத்தவனுக்கு ,
புள்ளிமானுக்கு கூட பொறமை வரும் துள்ளிவிளையாடும் அவள் கால் அழகைப் பார்த்தால்,
புலி கூட சைவமாக மாறிவிடும் இந்தப் புள்ளிமானை பார்த்தால் .
யாருக்குதான் ஆசை இருக்காது இப்படி ஒரு தேவதை வாழ்நாள் முழுதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ,அதனால் தான் அவள் மீது சிலர் காதல் கொண்டாலும் எனக்கு அவர்கள் மீது கோபம் வந்ததில்லை.

Sunday, October 3, 2010

சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்!
"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.""நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.""பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்.""'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.""மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை.""தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.""உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன"."உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்.""தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்.""எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.""முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்.""பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்"."கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்"."அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."

Thursday, September 2, 2010

என்னையே ஏன் சோதிக்கிறாய்?

என்னையே ஏன் சோதிக்கிறாய்?
அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். அதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். “கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை” ஆர்தர் அஷே பதில் எழுதினார். “உலகமெங்கும் ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஐம்பது லட்சம் குழந்தைகள் டென்னிஸை முறைப்படி ஆடக் கற்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் திறமை பெறுகிறார்கள். ஐம்பதாயிரம் பேர் களத்திற்கு வருகிறார்கள். ஐந்தாயிரம் பேர் க்ராண்ட் ஸ்லாம் அளவை எட்டுகிறார்கள். ஐம்பது பேர் விம்பில்டன் வரை வருகிறார்கள். நான்கு பேர் அரையிறுதி ஆட்டம் வரையும் இருவர் இறுதி ஆட்டம் வரையும் வருகிறார்கள். அதுவரை வந்து நான் அதிலும் வென்று விம்பில்டன் கோப்பையை என் கையில் ஏந்தி நின்ற போது “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்கவில்லை. இன்று இந்தக் கொடிய நோயின் வலியில் துடிக்கும் இந்த நேரத்தில் “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்பது நியாயமாகாது”டென்னிஸ் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கை விளையாட்டிலும் அவர் அடைந்திருந்த தேர்ச்சி நம்மை வியக்க வைக்கிறதல்லவா? இந்த மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?இதே கருத்தை கம்ப இராமாயணத்திலும் ஓரிடத்தில் இராமன் வாயால் நாம் கேட்கிறோம். காட்டிற்குச் செல்லும் இராமனுடன் காடு வரை வந்த சுமந்திரன் என்ற அமைச்சர் இராமனின் அந்த நிலைக்கு வருத்தப்படும் போது இராமன் சொல்கிறான். “இன்பம் வந்தால் இனிமையானது என்னும் போது துன்பம் வந்தால் மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?”(இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத் துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?)இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்தை ஏற்றுக் கொள்பவன் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைப் போலவே வாழ்க்கையிலும் இன்பத்தை மட்டுமே வேண்டுதலும் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராத ஆசை.உலகிற்கு வரும் போது எதையும் நாம் எடுத்து வரவில்லை. பெற்றதெல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது. உலகத்தை விட்டுச் செல்லும் போது அவை அனைத்தையும் விட்டே செல்ல வேண்டி இருக்கிறது. சில சமயம் நாம் இங்கு இருக்கும் போதே சிலவற்றை இழக்க நேரிடுகிறது. விதி பலவந்தமாய் நம்மிடம் இருந்து சிலவற்றைப் பறித்துக் கொள்கிறது. கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் சொல்வது போல “இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா?” ஆர்தர் அஷெ கூறுவது போல நமக்கு நன்மைகள் வந்து குவிகிற போது யாரும் “எனக்கு மட்டும் இத்தனை தந்தாயே ஏன்” என்று கேட்பதில்லை. பெற்ற நன்மைகளுக்கு நாம் நன்றி கூடத் தெரிவிப்பதில்லை. நன்மைகளைப் பெற்றது நமது சாமர்த்தியத்தால் என்று பெருமைப்படுகிறோம். அப்படி நன்மைகளைப் பெறுவது இயல்பே என்பது போல் நடந்து கொள்கிறோம். ஆனால் தீமைகள் நம் வாழ்க்கையில் நடந்து விட்டாலோ பழி போட ஆட்களைத் தேடுகிறோம். கடவுளிடம் “என்னையே ஏன் சோதிக்கிறாய்?” என்று கேட்கிறோம். ஏதோ உலகில் கஷ்டப்படும் ஒரே மனிதர் நாம் தான் என்பது போல் நடந்து கொள்கிறோம்.ஆர்தர் அஷெ போல் கடுமையான சூழ்நிலைகளிலும் உண்மையை உணர்ந்து தெளிகிற மனப்பக்குவம் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும் மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் போது அவற்றின் கடுமைகளை நாம் மிகவும் குறைத்துக் கொள்கிறோம். இனி என்ன செய்யலாம் என்று ஆக்க பூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.அந்த மனமாற்றமும் பக்குவமும் அடைவது ஒரு நாளில் அடையக்கூடியது அல்ல. முதலில் மாற்ற முடியாத சிறிய அசௌகரியங்களை முகம் சுளிக்காமலும், முணுமுணுக்காமலும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். இந்த சிறிய அசௌகரியங்களால் குடிமுழுகி விடப் போவதில்லை என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த அசௌகரியங்களை உங்களுக்கு சவாலாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துக் கொள்ளும் போது பொறுத்துக் கொள்ளுதல் வெற்றி என்று ஆகிவிடுவதால் பொறுத்துக் கொள்ளுதல் எளிதாகிறது. அப்படியே படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்லவைகளையே பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே என்றாலும் தீயவைகளும் வரக்கூடும் என்பதை உணர்ந்திருங்கள். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இது இயற்கையான விதி தான். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். வந்ததை ஏற்றுக் கொண்டு இதை எப்படிக் குறைக்கலாம், அல்லது நீக்கலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள். அது நீக்கவோ, குறைக்கவோ முடியாததாக இருக்குமானாலும் அந்த விதியை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றிருக்கும் எத்தனையோ நன்மைகளை எண்ணிப் பாருங்கள். அத்தனை நன்மைகளுக்கு இடையில் இது போன்ற ஓரிரு தவிர்க்க முடியாத தீமைகள் வருவது இயல்பே என்று சமாதானமடையுங்கள். இது போன்ற சிந்தனைகள் பலப்படும் போது, உண்மைகள் உணரப்படும் போது, உங்கள் மன அமைதி ஒருபோதும் குறைவதில்லை.

பேச வழி காட்டுகிறார் வள்ளுவர்

பேச வழிகாட்டுகிறார் வள்ளுவர்
சொற்கள் மிக மிக வலிமையானவை. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பெறாத வெற்றிகள் இல்லை. அவற்றை முட்டாள்தனமாகப் பயன்படுத்துபவர்கள் படாத கஷ்டங்கள் இல்லை. பேச்சையே மூலதனமாக வைத்து நாட்டின் ஆட்சியையே பிடித்தவர்களை நாம் அறிவோம். சரியாகப் பேசத் தெரியாமல் இருப்பதெல்லாம் இழந்தவர்களையும் நாம் நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.அந்த அளவு முக்கியமான பேச்சுக் கலை பற்றி வள்ளுவர் பல இடங்களில் விளக்கி உள்ளார். பொதுவாக சில விஷயங்களை அந்தந்த அதிகாரங்களிலேயே விளக்கும் அவர், பேச்சைப் பற்றி பரவலாகப் பல இடங்களில் சொல்கிறார்.எப்படிப் பேச வேண்டும்?மிகவும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும் சொல்லுக சொல்லில் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (645)(ஒரு சொல்லைச் சொல்லும் போது அதை விடச் சிறந்த பொருத்தமான சொல் இல்லாதவாறு தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்.) வள்ளுவர் சொல்வது போல் பேசும் முன் சொற்களைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்கப் பழகிக் கொண்டால் பேச்சில் சொற்குற்றமோ, பொருள் குற்றமோ வர வாய்ப்பே இல்லை.நன்மை தரும் விஷயங்களையே பேச வேண்டும். அதுவே தர்மம் என்கிறார் வள்ளுவர். வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இல்லாத சொலல். (291)(ஒருபோதும் சிறிதளவேனும் தீமை இல்லாத சொற்களைச் சொல்வதே வாய்மை எனப்படும்.) மேலும் தீமை இல்லாதபடி பேசுவது, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதால், அன்பும் நட்பும் கெட்டுவிடாமல் பாதுகாக்கிறது. அவசியமானதை ரத்தினச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். பேசிக் கொண்டே போவதை அறிவுக் குறைபாடாகக் கருதுகிறார் அவர்.பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லத் தேறாதவர் (649)(குற்றமற்ற சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர் உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.) எனவே அதிகமாகப் பேசும் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்ல விரும்புவதை இன்னும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று அவ்வப்போது ஆராய்ச்சி செய்து கொள்வது நல்லது.எப்படிப் பேசக் கூடாது?அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசக் கூடாது என்கிறார். ஏனென்றால்தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு (130)(தீயினால் சுட்ட புண் வெளியே வடு தெரிந்தாலும் காலப்போக்கில் உள்ளே ஆறி விடும். ஆனால் நாவினால் கடுமையான சொற்களால் சுட்ட வடு என்றுமே ஆறாது). எத்தனையோ தீராத பகைக்கு முக்கிய காரணமாக இருப்பது புண்படுத்தும் சில அனாவசிய வார்த்தைகளே.கடுமையான சொற்களைப் பேசுவது கூடாது என்கிறார் வள்ளுவர். அது அர்த்தமற்றது என்றும் முட்டாள்தனமானது என்றும் தன் பாணியில் அழகான உவமைகளுடன் கூறுகிறார் பாருங்கள்.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலொவன்சொல் வழங்குவது (99)(இனிமையான சொற்கள் இன்பம் தருவதைக் காண்கின்றவன் அதற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயனைக் கருதியோ என்று வள்ளுவரே ஆச்சரியப்படுகிறார்.)இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100)(இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது கனிகள் இருக்கையில் காய்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒப்பானது). பல நேரங்களில் கடுமையான சொற்களுக்கு அவசியமே இருப்பதில்லை. சொல்லி விட்ட சொல்லைத் திரும்பப் பெறும் வாய்ப்பும் நமக்கில்லை என்பதால் நமக்கோ அடுத்தவர்க்கோ பலனைத் தராத, துன்பத்தை மட்டுமே தருகிற சுடு சொற்களை நம் பேச்சிலிருந்து நீக்கி விடலாமே.பயனில்லாத சொற்களைச் சொல்வது தவறு என்றால் அதை விவரித்துச் சொல்வதை இங்கிதமில்லாத தன்மை, அறமில்லாத தன்மை என்று கடுமையாக வள்ளுவர் விமரிசிக்கிறார்.நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித்துரைக்கும் உரை (193)(ஒருவன் பயனில்லாத விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுவது அவன் அறம் இல்லாதவன் என்பதைத் தெரிவிக்கும்.) இதற்கு எத்தனையோ தினசரி உதாரணங்களை நாம் பார்க்க முடியும். தேவையற்ற, யாருக்கும் பலனளிக்காத விஷயங்களை விரிவாகப் பேசுபவன் அதன் மூலம் தன் தரத்தை மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்கிறான். எதை எங்கே பேசக் கூடாது?தெரியாத விஷயங்களைப் பேசக் கூடாது. அதுவும் தெரிந்தவர்கள் முன் பேசவே கூடாது என்கிறார் வள்ளுவர். பேசி முட்டாள் என்பதை நிரூபிப்பதை விட அமைதியாக இருந்து நல்ல பெயரை வாங்கிக் கொள்வது நல்லது என்கிறார்.கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்சொல்லாதிருக்கப் பெறின் (403)(கற்றவர் முன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்களேயானால் கல்லாதவர்களும் நல்லவர்களே ஆவர்). மேலும் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அங்கே உளறிக் கொட்டி அறிவின்மையை பறைசாட்டுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா?நல்ல பேச்சிற்கு என்ன பலன்?நன்மை தரும் நல்ல பேச்சு கேட்பவருக்கு தக்க சமயத்தில் தவறி விடாமல் காத்துக் கொள்ள உதவும் என்கிறார் வள்ளுவர்.இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றேஒழுக்கமுடையார் வாய்ச் சொல். (415)(ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள் வழுக்கும் சேற்று நிலத்தில் ஊன்று கோல் போல் தளர்ந்த சமயம் உதவும்.) வாழ்க்கையில் வழுக்கி விழாமல் இருக்க அறிவார்ந்த அனுபவஸ்தர்களின் வார்த்தைகளை விடச் சிறந்த ஊன்றுகோல் கிடையாது. அவை பல இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டும். கேட்பவருக்குப் பலன் அதுவென்றால் பேசுபவருக்கு என்ன பலன்? நன்மையான பேச்சுகளை நல்ல விதமாகச் சொல்பவரை உலகமே பின்பற்றி நடக்கும் என்கிறார் வள்ளுவர். விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)(கருத்துகளை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவருடைய ஏவலை உலகமே கேட்டு நடக்கும்.) நல்ல கருத்துகளை நல்ல விதமாகச் சொல்லி பலர் வாழ்க்கைப் பாதைகளை நெறிப்படுத்த முடிந்தால் அந்தத் திருப்திக்கு நிகரேது?மொத்தத்தில் நல்லதை மட்டுமே, சுருக்கமாக, இனிமையாக, மற்றவருக்குப் பயன் தரும் வண்ணம் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். நாம் அப்படிப் பேசப் பழகிக் கொண்டால் அது அடுத்தவர்களுக்கு நல்லது, நமக்கு மிக மிக நல்லது.

கழுகிற்கும் உந்துதல் அவசியமே

கழுகிற்கும் உந்துதல் அவசியமே!
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது..அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது. அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும். தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. ”நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.அதற்காக “நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட” என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் ’எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது’ என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.முட்டைப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சி ஆக மாறுகிறது என்பதை உயிரியல் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நேரடியாகப் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த முட்டையில் இருந்து வெளியே வர அது முயலும் கட்டத்தில் அதையே எந்தத் தொந்திரவும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருக்கச் சொல்லி விட்டு அவர் வெளியே சென்று விட்டார். அந்த முட்டைக் கூட்டிலிருந்து வெளியே வர அந்தப் பூச்சி படும் பாட்டைக் கண்ட ஒரு மாணவனுக்கு மனம் இரங்கியது. அந்தப் பூச்சி கஷ்டப்படாமல் வெளியே வர ஏதுவாக அந்த முட்டைக் கூட்டை உடைத்து விட்டான். அந்தப் பூச்சி சிறிது நேரத்தில் இறந்து போயிற்று.திரும்பி வந்த ஆசிரியரிடம் நடந்ததை மாணவர்கள் கூறினார்கள். ஆசிரியர் அந்த மாணவனிடம் சொன்னார். “அந்த முட்டையில் இருந்து வெளியே வர அந்த வண்ணத்துப் பூச்சி செய்யும் கடும் முயற்சியில் தான் அதன் சிறகுகள் பலம் பெறுகின்றன. அது வண்ணத்துப் பூச்சியாக மாற அந்த கஷ்டப்பட்டு செய்யும் முயற்சிகள் உதவுகின்றன. நீ அந்த கடும் முயற்சியை நிறுத்தியதன் மூலம் அது வண்ணத்துப் பூச்சியாக உருவாவதையும் தடுத்து விட்டாய்”வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல. கஷ்டங்களை எப்படி எதிர்கொள்வது, எப்படி அதிலிருந்து மீள்வது என்று கற்றுக் கொள்வது தான் அந்தக் கஷ்டங்களை வெற்றி கொள்ளும் வழி. ”கஷ்டங்களே தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வது “வாழ்க்கையே என்னவென்று தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வதற்கு சமம். பெற்றோர் பிள்ளைகளுக்கு வழி காட்டலாம். ஆனால் வழிநெடுகக் கூடப் போய் அவர்களைப் பலவீனர்களாக்கி விடக்கூடாது. எப்போதுமே அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறவர்களாக இருத்தி விடக்கூடாது. பெற்றோர்களே! நீங்களும் இந்தத் தவறைச் செய்கிறீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அவரவர் கால்களில் நிற்கும் காலம் வந்த பின்பும் தாங்கிக் கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியிருந்தால் தாய்க்கழுகைப் போல உங்கள் பிள்ளைகளைத் தள்ளி விடுவது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி.இளைஞர்களே! பெற்றவர்களுடைய தயவிலோ, மற்றவர்களுடைய தயவிலோ சொகுசான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா என்பதை நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். அப்படி இருந்தால் உடனடியாக அந்தச் சிறையிலிருந்து தப்பித்து விடுவது நல்லது. வாழ்வில் சுதந்திரமும், வலிமையும், அர்த்தமும் பெற சிறகை விரித்துப் புறப்படுங்கள். உங்களால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகம் கொள்ளாதீர்கள். பலவீனர்களாக இருக்க இறைவன் உங்களைப் படைக்கவில்லை. எனவே நீங்கள் சமர்த்தர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் இருக்கச் செய்யும் எல்லா முயற்சிகளிலும் இறைவன் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருப்பான்.

Monday, August 30, 2010

மரங்களை வளர்காதீர் -காரம் உள்ளே

இந்திய நீர்வளத்தை கெடுத்த அமெரிக்கா/ஐரோப்பா;உபயம் சீமைக்கருவேலமரம்

மரங்களை வெட்டுங்கள்உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! ) நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியது நிஜம்.ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.இதன் கொடூரமான குணங்கள்இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.உடம்பு முழுதும் விஷம்இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.அறியாமைநமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.கேரளாவின் விழிப்புணர்வுநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.நல்ல மரம் ஆரோக்கியம்வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!

இந்தியாவின் உள்ளர்ந்த்த பெருமைகள்

இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்
இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்இந்தியாவில் தமிழ்நாட்டில் கி.பி.2005 ஆம் வருடம் வரதட்சணை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார்களில் 260 புகார்களில் 200 பொய்யானவை.கி.பி.2006 ஆம் வருடம் கொடுக்கப்பட்ட புகார்களில் 285 புகார்களில் 220 பொய்யானவை என தெரியவந்துள்ளது.மாமியார் மற்றும் மனைவியின் பெற்றோர்களின் பணத்தாசையே பெரும்பாலும் காரணம்.தன் மகளின் ஒழுக்கமான எதிர்காலம் பற்றி சிறிதும் கவலையில்லை.ஆக சட்டங்களால் சமுதாய கட்டமைப்பை அழிக்கத்தான் முடியும்.இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களில் மொத்தம் 12,400 காவல் நிலையங்களே உள்ளன.பெரும்பாலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே காவலர்கள் 7 லட்சம் கிராமங்களுக்கும் வருவார்கள்.நாமக்கல்லில் இந்தியாவிலேயே அதிக லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள்.டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கூட கனரகவாகனங்கள் பற்றி ஆய்வு நடத்திட நாமக்கல்லுக்குத்தான் வருகிறார்கள்.அமெரிக்காவில் சாலையோர உணவகங்கள் எனப்படும் மோட்டல்களில் 80% குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.இங்கிலாந்து மான்செஸ்டர் பஞ்சாலைகளை ராம்காடியா சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.திருப்பூரில் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் வெறும் 300 தமிழர்கள் மட்டுமே! இவர்களில் 99% பேர் படிப்பில் 6 ஆம் வகுப்பைத் தாண்டாதவர்கள்.சுதந்திரம் வாங்கிய போது கி.பி.1947 இல் உலக பொருளாதார வளர்ச்சி 4.2%.இந்திய பொருளாதார வளர்ச்சி 2% மட்டுமே!இன்று(அமெரிக்காவைச் சார்ந்திருப்பதால்) உலக பொருளாதார வளர்ச்சி(கி.பி.2007)3.1%இந்திய பொருளாதார வளர்ச்சி 7%நம்மைப் பார்த்தே ஆங்கிலேயர்கள் சமுதாயக் கல்வியில் ஈடுபட்டனர்.

பாரதம் அன்றும் இன்றும்

பாரதம் அன்றும் இன்றும்

பாரதம் அன்றும் இன்றும்கடந்த 10,000 ஆண்டுகளாக எந்தநாட்டின் மீதும் பாரதம் படையெடுக்கவில்லை.கணக்கிடுவதற்குத் தேவையான பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது பாரதம் தான்.பூஜ்ஜியத்திற்கு மதிப்பைக் கண்டறிந்தவர் தமிழ்நாட்டுக் கணிதமேதை ராமானுஜம்தான்.உலகின் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலம் ஆகும்.இது கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.உலகம் முழுவதுமிருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.600 க்கும் மேற்பட்ட பாட வகைகள் இங்கு கற்பிக்கப்பட்டன.ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்க்ருதம் தான்.கணிப்பொறி எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க ஏற்ற மொழி சமஸ்க்ருதம் தான் அமெரிக்கப் பத்திரிகையானபோர்ப்ஸ் 1987 ஜீலை மாத வெளியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.ஆதிகாலத்தில் மனிதன் கண்டறிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம் தான்.இதை சரகர் என்ற இந்து ரிஷி கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.இன்று இங்கிலாந்தின் அரசி எலிசபெத் யோகாசனம் சார்ந்த ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றி வருகிறார்.45 வயதான பாப் பாடகி மடோனாவின் குரல் வளமும், கட்டுடலும் யோகாசனப்பயிற்சியால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.நாவிகேஷன் என்ற சொல்லப்படும் கப்பல்,படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதிக்கரையில் நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்துக்கள்.நவ்கத் என்ற சமஸ்க்ருத சொல்லே ஆங்கிலத்தில் நாவிகேஷன் ஆனது.அதே போல தீ என்றால் நெருப்பு.ஆதிகாலத்தில் தீயை தமிழர்கள் வழிபட்டார்கள்.ஆங்கிலத்தில் கடவுள் என்ற வார்த்தைக்கு thee என்று பெயர்.எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பே இந்துயாவுடன் இங்கிலாந்து வாணிகத் தொடர்பு இருந்ததற்கு இந்த வார்த்தை ஒரு ஆதாரமாகும்.பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்ததாக கூறுவதற்கு முன்பே கி.பி.5 ஆம் நூற்றாண்டிலேயே பாரதத்தின் பட்டாச்சாரியார் கண்டுபிடித்துவிட்டார்.மிகச்சரியாக365.258756584 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியார் கண்டுபிடித்தார்.கணிதத்தில் பையின் மதிப்பை கணிக்கிட்டவர் போதாயனார் என்ற பாரத ரிஷி ஆவார்.ஐரோப்பிய கணித மேதைகள் பிதோகரஸ் தேற்றத்தை விளக்குவதற்கு முன்பே அதாவது 6 ஆம் நூற்றாண்டிலேயே போதயனார் விளக்கிவிட்டார்.கணிதத்தில் அல்ஜீப்ரா,டிரிக்னாமெட்ரி,கால்குலஸ் ஆகியவை பாரதத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.குவார்ட்ராடிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சாரியார் என்ற பாரதீயரால் 11 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.கம்பியில்லாத தகவல் தொடர்பை பாரதத்தின் ஜகதீஷ் சந்திர போஸ் முதலில் கண்டுபிடித்தார்.மார்க்கோனி அல்ல என அமெரிக்க நிறுவனமான I.E.E.E. உறுதியாக கூறுகிறது.சுஸ்ருதர் என்ற பாரதீயர் 2600 வருடங்களுக்கு முன்பே சிசேரியன்,கேடராக்ட்,செயற்கைக்கால்,கை, கால் எலும்புமுறிவு, மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்துவ சிகிச்சையும் செய்து இருக்கிறார்.125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.அமெரிக்க டாக்டர்களில் 38%,விஞ்ஞானிகளில் 12% நாசாவில் 36%, மைக்ரோசாப்டில் 34%, இன் டெல்லில் 17%,சிராக்ஸ் ஸில் 13%, ஐ.பி.எம்மில் 28% இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.இவ்வளவு பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது?