Monday, March 14, 2011

அண்ணாதுரை நினைவுகள்

அண்ணாதுரை நினைவுகள் : அரசியல் ரீதியாக, தம்மை தாக்கிப் பேசுபவர்களை அண்ணாதுரையும் பதிலுக்கு விமர்சனம் செய்வதுண்டு. ஆனால், விமர்சனத்துக்குள்ளாகிறவர்களே ரசித்து சிரிக்கும்படியாகத் தான் இருக்கும். அதில் ஒரு சம்பவம்.
கடந்த 1962 பொதுத் தேர்தலில், தென்சென்னை லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில், நாஞ்சில் மனோகரன் நிறுத்தப்பட்டார். தி.மு.க.,விலிருந்து விலகிய ஈ.வி.கே.சம்பத்தும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர், தன் பிரசாரத்தின் போது, "சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கப் போவதாக' பேசி வந்தார்.
இதற்கு அண்ணாதுரை பதிலடி கொடுத்து பேசும் போது, "சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாம்; அது ஒன்றும் பெரிய விஷயமில்லை; ஆனால், அதன் பிறகு வெளியே வருவது சிங்கமா, ஆளா என்பது தான் முக்கியம்' என்றார். பார்வையாளர்கள் மட்டுமல்லாது, சம்பத்தையும் சிரிக்க வைத்தது இந்த பதிலடி.
ஈ.வெ.ரா.,வை தலைவராக ஏற்றுக் கொண்டு, அவர் இட்ட கட்டளையை அப்படியே நிறைவேற்றி வந்தவர் அண்ணாதுரை. ஆனால், அண்ணாதுரையை ஒதுக்கி வைத்து, நோகடிக்கும் பணியை ஈ.வெ.ரா., அடிக்கடி செய்துள்ளார்.
திராவிட நாடு பத்திரிகையில், "தம்பிக்கு கட்டுரை' பகுதியில் வந்த ஒரு பகுதி: இது வரையிலும், இனி மேலும், ஒரு தலைவனுக்கு கீழ்படிந்து நடப்பதில், என்னை விட வேறு யாரும் உண்டா? உதாரணத்திற்கு நான் ஒன்று கூறுவேன்; வட நாட்டில் நான் அவரோடு (ஈ.வெ.ரா.,) சுற்றுப் பயணம் செய்தேன். லக்னோ பல்கலைக் கழகத்தில் ஈ.வே.ரா., தமிழில் பேசினார். நான் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். மொழி பெயர்த்த பிறகு, அந்த மாணவர் கூட்டத் தலைவர், நான் எம்.ஏ., படித்தவன் என்பதை அறிந்து, என்னையும் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார்.
நான் ஈ.வெ.ரா.,வை திரும்பிப் பார்த்தேன். "பேசாதே' என்றார்; நான் பேசவில்லை. மறுபடியும் அவர்கள் வற்புறுத்தினர். நான் மீண்டும் கேட்டேன். ஈ.வெ.ரா., "பேசக் கூடாது' என்று தடை போட்டார். மூன்றாவது முறையாக அவர்கள் வற்புறுத்தினர்.
அப்போது, " நான் பேசுவதற்காக வரவில்லை. ஈ.வெ.ரா.,வின் பேச்சை மொழி பெயர்க்கத்தான் வந்தேன் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லு' என்றார்; நானும் அதை எடுத்துச் சொன்னேன். அவ்வளவு அடக்க ஒடுக்கமாக ஈ.வெ.ரா.,விடம் நான் நடந்து கொண்டேன். அவருக்கு கிடைத்த அடக்க ஒடுக்கமானவர்களில், நான் தான் கடைசி ஆள்!
ஈ.வெ.ரா.,விடம் விசுவாசம் மிக்க பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்ற பேச்சாளர், ஊர் ஊராகச் சுற்றி, தொண்டை வற்றப் பிரசாரக் கூட்டங்களில் பேசி, இறுதியில் காசநோய் கண்டுபடுத்தார். அவருக்கு மருத்துவச் செலவுக்காக உதவி செய்ய ஈ.வெ.ரா., விரும்பவில்லை. "கண்டதையும் குடித்துக் கெட்டுக் கிடந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?' என்று ஈ.வெ.ரா., கூறிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகவல் தெரிந்ததும், மனம் கேட்காமல், 5,000 ரூபாய் திரட்டி, மதியழகன் மூலமாக, தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் இருந்த அழகிரியிடம் சேர்த்தார். அப்போது, "நான் யாருக்காக பரிந்து பேசி அண்ணாவைத் தூற்றினேனோ, அவர் என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால், நான் கண்டபடி தூற்றிப் பேசிய அண்ணாதுரை, எனக்கு உதவி செய்துள்ளார். இதை நான் என்றும் மறக்க மாட்டேன்' என, கண்ணீர் விட்டு மதியழகனிடம் கூறினாராம் அழகிரி.

No comments:

Post a Comment